4 கோடி கடன்
2015இல் ஒரு பொதுவான நண்பரின் அறிமுகத்தால் சென்னை, உத்தண்டி, ஜுஹு பீச் ரோடை சேர்ந்த தொழிலதிபர் ஜி மகேஷ் என்பவருக்கு 4 கோடி கடன் கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். அந்த கடன் தொகையை பெற பின்னர் முயற்சி செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.
புகார்
ஆனால், அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என தன் புகாரில் கூறி உள்ளார். ஆகஸ்ட் 18 அன்று மகேஷ் தனக்கு அளித்த ரூ.25 லட்சம் செக், பணம் இல்லாததால் வங்கியில் திரும்பி வந்து விட்டதாக கூறி சென்னை நகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறி இருந்தார் ஹர்பஜன் சிங்.
விசாரணை
இந்த வழக்கை நீலாங்கரை துணை கமிஷனர் விஸ்வேஸ்வரையா விசாரித்து வருகிறார். அவர் மகேஷை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பி இருக்கிறார். மகேஷ் இந்த விசாரணையில் இருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி உள்ளார்.
அடமானம்
மகேஷ் தனது முன் ஜாமீன் மனுவில் தான் ஹர்பஜன் சிங்கிடம் வாங்கிய கடனுக்கு, அடமானமாக தன் தாழம்பூர் அசையா சொத்தை வழங்கி இருப்பதாகவும், 2015இல் ஹர்பஜன் சிங்கிற்கு ஆதரவாக "பவர் ஆஃப் அட்டார்னி" அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் கூறி இருக்கிறார்.
கடனை செலுத்தி விட்டேன்
தான் அனைத்து தவணைகளையும் செலுத்தி விட்டதாக அவர் கூறி உள்ளார். அவரது முன் ஜாமீன் மனு மூலமே இந்த விவகாரம் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. ஹர்பஜன் சிங் சென்னை தொழிலதிபர் மீது புகார் கூறி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹர்பஜன் சிங் விலகல்
ஹர்பஜன் சிங் 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஐபிஎல் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.