2007 உலகக்கோப்பை தோல்வி
2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை வங்கதேசம், பெர்முடா ஆகிய அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்று இருந்தன. அதில் இந்தியா பெர்முடா அணியை மட்டுமே வீழ்த்தியது. மற்ற இரு அணிகளின் தோல்வி அடைந்து குரூப் சுற்றுடன் வெளியேறியது.
அணியில் நிலவிய குழப்பம்
அப்போது இந்திய அணியில் குழப்பம் நிலவியதே இந்த படுதோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ராகுல் டிராவிட் கேப்டனாக அந்த உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி இருந்தார். இவை அனைத்திற்கும் காரணம் கிரேக் சேப்பல் தான்.
என்ன செய்தார்?
கிரேக் சேப்பல் 2005ஆம் ஆண்டு இந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் வந்த பின் அணியை தன் இஷ்டம் போல மாற்றினார். அவரால் அணியில் பிளவு ஏற்பட்டது. வீரர்கள் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையை இழந்தனர். கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பின் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
ஹர்பஜன் சிங் விமர்சனம்
அவரைக் குறித்து இப்போது ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவுக்கு அளித்த பேட்டியில் தான் ஹர்பஜன் சிங் இவ்வாறு பேசி உள்ளார். கிரேக் சேப்பல் போல அணியை சீர்குலைக்க யாராலும் முடியாது எனவும் கூறினார்.
அணியை சீர்குலைத்தார்
கிரேக் சேப்பல் பயிற்சியாளராக வந்த போது மொத்த அணியையும் சீர்குலைத்து விட்டார். அவரது நோக்கம் என்ன என யாருக்கும் தெரியவில்லை. அவரைப் போல அணியை சீர்குலைக்க யாராலும் முடியாது. அவர் என்ன விரும்பினாரோ அதை எல்லாம் செய்தார் என்றார் ஹர்பஜன் சிங்.
மோசமான விஷயம்
2007 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தான் என் கிரிக்கெட் வாழ்வில் மோசமான விஷயம். அந்த அளவுக்கு மோசமான நேரம் அது. இந்திய அணியில் ஆட இது நேரம் அல்ல என்று கூட நான் நினைத்தேன். இந்திய கிரிக்கெட் தவறான நபர்களின் கைகளில் இருந்தது. கிரேக் சேப்பல் பிரித்தாளும் வேலையை செய்ய முயன்று வந்தார் என்றார் ஹர்பஜன் சிங்.
ஒருவரை ஒருவர் நம்பவில்லை
2007 உலகக்கோப்பை தொடரில் எங்களிடம் பலமான அணி இருந்தது. ஆனால், யாரும் சரியான மனநிலையில் இல்லை, ஒருவரை ஒருவர் நம்பவில்லை. அதனால், அப்போது சரியாக செயல்பட முடியவில்லை என்று கூறினார் ஹர்பஜன் சிங்.
தோல்வி
அணி மகிழ்ச்சியாக இல்லை என்றால் முடிவுகள் சாதகமாக அமையாது. நாங்கள் இலங்கை, வங்கதேச அணிகளிடம் தோற்றோம். அவர்கள் பெரிய அணி அல்ல. அது ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது போன்றதல்ல. என்றார் ஹர்பஜன் சிங்.