கடும் பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் அந்த வைரஸ் துவங்கி உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் நிலை
இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இதுவரை இந்தியாவில் 660க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழைகள் பாதிப்பு
உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. அது மட்டுமின்றி, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், மக்கள் வெளியே பணிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. அதனால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்ரிடி உதவி
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ஏழைகளுக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி உள்ளார் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி. இந்த நேரத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டியது நமது கடமை எனவும் அவர் கூறி இருந்தார்.
ஹர்பஜன் பாராட்டு
அப்ரிடி ஏழை மக்களுக்கு உதவும் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் "மனிதநேயம் கொண்ட பெரிய உதவி. கடவுள் நம்மை ஆசிர்வதிக்கட்டும். உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கட்டும். உலகின் நன்மைக்காக பிரார்த்திப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
|
நமது கடமை
அந்த பதிவிற்கு அப்ரிடி நன்றி கூறி உள்ளார். அதில், "பாஜி உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உலகம் ஒன்றுபட வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டியது நமது கடமை" என குறிப்பிட்டுள்ளார். ஏழைகள் துயர் குறைய வேண்டும் என்றால் கொரோனா வைரஸ் தாக்கம் விரைவில் குறைய வேண்டும்.