டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். எனினும், அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது விளையாட்டு அமைச்சகம்.
ஆண்டு தோறும் இந்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் அர்ஜுனா விருதுகள், கேல் ரத்னா விருது ஆகியவை வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருதுகளுக்கான பெயர் பரிந்துரைகள் விளையாட்டு அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு விளையாட்டு அமைப்பும் தங்கள் விளையாட்டு வீரர்களில் சிறந்தவர்களின் பட்டியலை தயார் செய்து அர்ஜுனா விருதுகளுக்கு அனுப்பி வைத்துள்ளன. கிரிக்கெட்டுக்கு பிசிசிஐ மூன்று வீரர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
நம்பர் 1 வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீட் பும்ரா, முகமது ஷமி, மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் இருந்து பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது பிசிசிஐ. அதே சமயம், கேல் ரத்னா விருதுக்கு யாரையும் பரிந்துரை செய்யவில்லை.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில அரசு தங்கள் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பெயரை கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்தது. அந்த விண்ணப்பத்தைத் தான் விளையாட்டு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம் இது தான். விளையாட்டு அமைச்சகத்துக்கு விருது பரிந்துரை விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 30, 2019 ஆகும். ஆனால், பஞ்சாப் மாநில அரசு ஜூன் 25, 2019 அன்று தான் பரிந்துரை விண்ணப்பத்தை அனுப்பி உள்ளது.
அதன் காரணமாக ஹர்பஜன் சிங் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது விளையாட்டு அமைச்சகம். அதனால், இந்த ஆண்டு எந்த வீரரும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு கேப்டன் விராட் கோலி கேல் ரத்னா விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமில்லாமல், பிசிசிஐ அனுப்பிய அர்ஜுனா விருதுகள் பட்டியலில் விதிப்படி மூன்று பேரை மட்டுமே பரிசீலனை செய்ய முடியும் என அமைச்சகம் கூறியுள்ளது. எனவே, எந்த மூன்று பெயரை பரிசீலனைக்கு அனுப்பலாம் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.