சிட்னி: இந்திய அணியில் கூடுதல் ஆல்ரவுண்டர்களை சேர்க்க வேண்டும் என்று அணி தேர்வர்களுக்கு அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்ட்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது தம்பியும் இந்திய அணியின் ஆல்ரவுண்டருமான குர்னால் பாண்ட்யாவை அணியில் சேர்க்கலாம் எனவும் அவர் தம்பிக்கு நைசாக வாய்ப்பு கேட்டுளளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி 101 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தத்தளித்தது.
தவானுடன் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து 76 பந்துகளில் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த கூட்டணியும் விரைவில் வெளியேறி இருந்தால் இந்தியா மிக மோசமாக தோற்று இருக்கும்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு நிருபர்களை சந்தித்த ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் அதிக ஆல்ரவுண்டர்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இது குறித்து அவர் பேசியதாவது:-
5 பவுலர்களுடன் 50 ஓவர் போட்டி ஆடுவது எப்போதும் கடினமான ஒன்றுதான். இதில் ஒருவர் காயம் அடைந்தாலும், சரியாக விளையாட வில்லை என்றாலும் நிலைமை சிக்கலாகி விடும். எனவே அணிக்கு தற்போது 6 வது பவுலர், ஆல்ரவுண்டர் மிக அவசியம்.
அதுக்குன்னு ஒரு அளவு இல்லையா? எல்லை மீறிய விராட் கோலி.. ஐசிசி எடுத்த அதிரடி ஆக்ஷன்!
பந்து வீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன். அதில் 100 சதவீத திறனை கொண்டு வர விரும்புகிறேன். சர்வதேச அளவிற்கு தேவையான வேகத்தில் பந்து வீச விரும்புகிறேன் என்றார்.
அப்போது அந்த ஆல்ரவுண்டர் பட்டியல் குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஹர்திக் பாண்ட்யா தனது தம்பியும் இந்திய அணியின் ஆல்ரவுண்டருமான குர்னால் பாண்ட்யாவை பரிசீலிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இது குறித்து கூறிய அவர், பாண்ட்யா குடும்பத்தில் இருந்தும் அந்த ஆல்ரவுண்டரை தேடலாம் என்றார். குர்னால் பாண்ட்யா இதுவரை இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. அவர் 18 டி2௦ போட்டிகளில் விளையாடி 124 ரன்கள் எடுத்துள்ளார். 14 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.