உடற்தகுதி பயிற்சி
ஹர்திக் பண்டியா கடந்த நான்கு மாதங்களாக காயம் மற்றும் சிகிச்சை காரணமாக ஓய்வில் இருந்தார். முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் தனி நிபுணரை நியமித்து கடந்த மாதத்தில் தீவிரமாக உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
தயார் ஆகவில்லை
நியூசிலாந்து தொடரில் ஆட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இருந்தாலும், அவரது உடற்தகுதி நிபுணர், ஹர்திக் பண்டியா இன்னும் சர்வதேச போட்டிகளில் நீண்ட நேரம் பந்துவீசுவதால் ஏற்படும் பணிச்சுமையை ஏற்க தயார் ஆகவில்லை என பிசிசிஐக்கு அறிக்கை அளித்தார்.
இந்தியா ஏ அணி வாய்ப்பு
அதனால், நியூசிலாந்து நாட்டுக்கு சென்ற இந்தியா ஏ அணியில் இடம்பெற்று பயிற்சிப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்தார் ஹர்திக் பண்டியா. அடுத்து நியூசிலாந்து தொடருக்கான அணி அறிவிக்கப்பட இருந்த நிலையில், அவர் அந்த தொடர் முழுவதும் இடம்பெற மாட்டார் என கருதப்பட்டது.
கோலி எண்ணம்
அதே சமயம், கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளங்களில் வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பண்டியா இடம் பெற்றால் அது டெஸ்ட் போட்டிகளில் அணியின் சம நிலையை சீராக்கும், போட்டிகளில் வெல்ல உறுதுணையாக இருக்கும் என கருதினர்.
பயிற்சி பெற முடியவில்லை
மேலும், நியூசிலாந்து ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சு எடுபடாது. எனவே, இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை இருப்பது பலமாக மாறும். ஆனால், ஹர்திக் பண்டியா உடற்தகுதி சிக்கலால், அவரால் நியூசிலாந்து சென்று அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது.
தேர்வுக் குழு முடிவு
அதனால், ஒருநாள் போட்டிகளில் பயிற்சி பெற்று, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வைக்கலாம் என்ற முடிவில், டி20 அணியை மட்டும் அறிவித்தது தேர்வுக் குழு. இதற்கிடையே, ஹர்திக் பண்டியா, ராகுல் டிராவிட் மேற்பார்வையில், பந்துவீச்சு தகுதி பெற வேண்டி, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டார்.
தோல்வி
அந்த பயிற்சிகளின் முடிவில் நடத்தப்பட்ட பந்துவீச்சு பணிச்சுமை தேர்வில் ஹர்திக் பண்டியா தேர்ச்சி அடையவில்லை என பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது. அதனால், அடுத்து ஒருநாள் அணியை மட்டும் அறிவித்துள்ளது தேர்வுக் குழு. டெஸ்ட் அணி இன்னும் சில நாட்கள் கழித்து அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆட வைத்தே ஆகவேண்டும்
அதற்கு காரணம், டெஸ்ட் அணியில் எப்படியாவது ஹர்திக் பண்டியாவை சேர்த்து விட வேண்டும் என கேப்டனும், பயிற்சியாளரும் விரும்புவது தான் என கூறப்படுகிறது. அதற்காக, தற்போது ஹர்திக் பண்டியாவை உள்ளூர் ரஞ்சி தொடர் போட்டி ஒன்றில் ஆட வைக்க உள்ளனர்.
நேரடி தேர்வு
அந்தப் போட்டியின் மூலம் ஹர்திக் பண்டியாவின் பந்துவீச்சு பணிச்சுமை குறித்து முடிவு செய்ய உள்ளதாக கூறி உள்ளது பிசிசிஐ வட்டாரம். ஆனால், உண்மையில் அந்தப் போட்டியின் முடிவில் ஹர்திக் பண்டியா நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள்.
தீவிர நடவடிக்கைகள்
இந்த விவகாரத்தில் பிசிசிஐ விதிமுறைப்படி செயல்பட முயல்கிறது என்றாலும், கேப்டன் விராட் கோலியின் விருப்பத்தாலேயே எப்படியாவது ஹர்திக் பண்டியாவை அணியில் சேர்க்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பரோடா அணியின் அடுத்த ரஞ்சி தொடர் போட்டியில் பண்டியா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.