மும்பை : 16து டிஒய் படேல் டி20 கோப்பையில் விளையாடிய ஆல் -ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அடுத்தடுத்த சதங்கள் ரசிகர்களை உற்சாகத்திற்குள்ளாக்கியது.
முதுகில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ள ஹர்திக் பாண்டியா தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டிஒய் படேல் டி20 கோப்பை போட்டியில் நேற்று விளையாடிய ஹர்திக் பாண்டியா, 55 பந்துகளில் 158 ரன்களை எடுத்த நிலையில் போட்டி முடிந்தவுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குழுமி, 'ஹர்திக்', 'ஹர்திக்' என முழக்கமிட்டனர்.
இந்திய அணியில் விளையாடிவந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஆண்டில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்திய அணியில் அவர் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் அவர் இறுதியாக விளையாடினார்.
What crowds post the DY Patil t20 Cup! All rooting for just one man @hardikpandya7 #cricket pic.twitter.com/SCMWEJNmxd
— Chandresh Narayanan (@chand2579) March 6, 2020
இந்நிலையில் லண்டனில்நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது தேறிவரும் ஹர்திக் பாண்டியா பிட்னஸ் தேர்விலும் பங்கேற்றனார். இதனிடையே, வரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைமை தேர்வாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் டிஒய் படேல் மைதானத்தில் நடைபெற்ற டிஒய் படேல் டி20 கோப்பை தொடரில் ரிலையன்ஸ் அணி சார்பில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் குரூப் சியில் உள்ள சிஏஜி அணிக்கு எதிராக மோதிய ஹர்திக் பாண்டியா, 105 ரன்களை அடித்து ரசிகர்களை திணறடித்தார்.
இந்நிலையில் ரிலையன்ஸ் அணி சார்பாக பிபிசிஎல் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பங்கேற்று ஆடிய ஹர்திக் பாண்டியா, 55 பந்துகளில் 158 ரன்களை குவித்தார். அடுத்தடுத்து அவர் அடித்த சிக்ஸ்களும் போர்களும், அடிக்கப்பட்ட பந்தை ரசிகர்களை தேடவைத்தன. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், போட்டி முடிந்தவுடன் மைதானத்தை நோக்கி படையெடுத்தனர். 'ஹர்திக்' மந்திரத்துடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவ்வாறு திரண்டதால் மைதானமே ஸ்தம்பித்தது.
இதனிடையே, இந்த போட்டி தன்னுடைய பிட்னசை உணர வைத்தது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். மேலும் தான் திட்டமிட்டு எந்த பந்தையும் எதிர்கொள்வதில்லை என்றும், பந்தின் போக்கிலேயே அதை அடித்து ஆடுவதாகவும் பாண்டியா தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த தொடர்மூலம் தான் திரும்ப வந்துவிட்டதை அவர் தேர்வாளர்களுக்கு உணர்த்தியுள்ளார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் அவரின் இருப்பு உறுதியாகியுள்ளது.