ஆல் - ரவுண்டர் பாண்டியா
இந்திய அணியில் நீண்ட காலமாக வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் இல்லாத நிலை நீடித்தது. கபில் தேவுக்குப் பின் நம்பகமான வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் யாருமே இல்லை. அந்த குறையை ஓரளவு போக்கினார் ஹர்திக் பாண்டியா. குறிப்பாக அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக இருந்தது.
முக்கிய வீரர்
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணி என மூன்று அணிகளிலும் கேப்டன் கோலி ஹர்திக் பாண்டியாவை ஆட வைத்தார். அவர் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், 2018இல் இருந்து அவருக்கு அதிக காயங்கள் ஏற்பட்டது.
காயம்
இரண்டு ஆண்டுகளில் பல கிரிக்கெட் தொடர்களில் ஆடும் வாய்ப்பை காயம் காரணமாக இழந்தார் பாண்டியா. 2019 உலகக்கோப்பை தொடரில் ஆடிய அவர் மீண்டும் அந்த தொடர் முடிந்த பின் காயத்தில் சிக்கினார். செப்டம்பரில் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை
பின்னர் இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ஹர்திக் பாண்டியா. அதன் பின் நீண்ட காலம் பயிற்சி செய்து கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் பங்கேற்க இருந்தார். அதற்குள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அந்த தொடர் ரத்து செய்யப்பட்டது.
வலியில் துடித்து கீழே விழுந்தார்
2018 ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்ட போது பரபரப்பு எழுந்தது. காரணம், அவர் தன் 5வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வலியில் துடித்து கீழே விழுந்தார். அது குறித்து தான் பயந்து போனதாக கூறி, அப்போது என்ன நடந்தது என விவரித்தார் பாண்டியா.
தொடர்ந்து பங்கேற்றார்
2018இல் நீண்ட இங்கிலாந்து தொடரில் ஆடி விட்டு அவர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஐந்தாவது பந்தை வீசி முடித்த நிலையில் அவர் வலியில் கீழே விழுந்தார்.
கேரியரே முடிந்தது
அப்போது அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்துச் சென்றனர். அதனால், பாண்டியாவால் நிற்க முடியவில்லை என்ற தகவல் பரவியது. அது பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா, "அப்போது என் கேரியரே முடிந்தது என நினைத்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
10 நிமிடங்கள்
மேலும், அந்த சம்பவம் நடந்த போது என்னை நானே பார்த்த போது, நான் முதலில் 10 நிமிடங்கள் என்ன நடக்கிறதே என தெரியாத அளவுக்கு இருந்தேன். எப்போது உள்ளே செல்வேன் என்றே எனக்கு தெரியவில்லை. அதனால் தான் நான் அவர்களை அழைத்துச் செல்லுமாறு கூறினேன். அதன் பின் அந்த வலி என்னை விட்டு அகலவே இல்லை என்றார்.
திருமணம்
தன் காயம் பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா, சமீபத்தில் லாக்டவுனில் தன் காதலி நடாஷா ஸ்டான்கோவிக்கை திருமணம் செய்து கொண்டார். அவர் தந்தையாகவும் ஆகப் போகிறார். அது குறித்தும் அவர் இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.