115 பந்துகளில் 171
அவரது இந்த அதிரடி 171 ரன்கள் வெறும் 115 பந்துகளில் வந்தன. டெர்பி மைதானமே கெளரின் இந்த புயல் வேக ஆட்டத்தால் நடுங்கிப் போய் விட்டது. அப்படி ஒரு அதிரடி ஆட்டம் அது. அந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஆளுக்கு 42 ஓவர்கள் என்ற கணக்குடன் நடந்தது. மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது.
அதிரடி ஆட்டம்
இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 6,. பூனம் ராத் 14 என பெவிலியன் திரும்பியிருந்தனர். அப்போதுதான் மித்தாலியும், கெளரும் கரம் கோர்த்தனர். இருவரும் இணைந்து 66 ரன்களைக் குவித்தனர். மித்தாலி ராஜ் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கெளர் தனது வெறியாட்டத்தை விடவில்லை. பிரித்து மேய்ந்து விட்டார்.
281 ரன்கள் குவிப்பு
கெளருக்குத் துணையாக தீப்தி சர்மா வந்து சேர்ந்தார். இருவரும் இணைந்து பிரித்தெடுத்தனர். 137 ரன்களை நான்காவது விக்கெட்டுக்குச் சேர்த்தனர். கெளர் 20 பவுண்டரிகளையும், 7 சிக்ஸர்களையும் விளாசி ஆஸ்திரேலியாவை மலைத்துப் போக வைத்து விட்டார். இதனால் இந்தியா 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்களைக் குவித்து வலுவான நிலையை எட்டியது.
முதல் முறையாக
பின்னர் பந்து வீச்சிலும் அசத்திய இந்தியா, ஆஸ்திரேலியாவை 245 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தீப்தி சர்மா 3 விக்கெட்களையும், ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அதுதான் முதல் முறையாகும். ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
ஆட்ட நாயகி
வுமன் ஆப் தி மேட்ச் விருது வாங்கினார் அப்போட்டியின் அதிரடி ஆட்டம் மூலம் கெளர். இந்தியா முழுவதும் அன்று அவர்தான் பேசு பொருளாகவும் விளங்கினார். கபில் தேவ், விராட் கோலி, வீரேந்தர் ஷேவாக், ரவி சாஸ்திரி என பலரும் கெளரைப் புகழ்ந்து தள்ளினர். இந்திய மக்களின் செல்லப் பிள்ளையாக மாறிப் போனார் கெளர் அந்த ஒரு அதிரடி ஆட்டம் மூலமாக.