2017ல் திருமணம்
கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கடந்த 2013ல் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து காதல் கொண்டனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2017ல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் ஆதர்ச தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இருவரும் மற்றவரின் கேரியரில் சிறப்பான வகையில் உதவி புரிகின்றனர். சமூக வலைதளங்களில் இவர்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் வட்டமே உள்ளது.
வீட்டிற்குள் கொண்டாட்டம்
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி செய்வதறியாது உள்ளனர். ஆயினும், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இந்த ஊரடங்கை கொண்டாடி வருகின்றனர். இவர்களின் கொண்டாட்டத்தை அறியும்வகையில் தினமும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மனம்திறந்த விராட் கோலி
இந்நிலையில், மாணவர்களுடன் நேரலையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா உரையாடி தங்களது வாழ்க்கை, கேரியர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, தான் அமைதி மற்றும் பொறுமையை தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி கருத்து
அனுஷ்கா சர்மாவை சந்திப்பதற்கு முன்பாக தான் மிகவும் பொறுமை இல்லாமல் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நேர்த்தி, அதில் தீர்வை காணும் தெளிவு போன்றவற்றையும் அவரிடமிருந்துதான் தான் கற்றதாகவும் விராட் கோலி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய விராட் கோலி, மாநில அளவில் தான் தேர்வு செய்யப்படாதபோது அன்றைய இரவு தான் அழுததாகவும் குறிப்பிட்டுள்ளார்.