சோயிப் அக்தரின் யூ-டியூப் பதிவு
முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் தொடர்ந்து விமர்சனங்களை செய்து வருகிறார்.
இந்திய அணி குறித்தும் பாராட்டு
இந்திய அணி மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் குறித்தும் சோயிப் அக்தர் தொடர்ந்து தன்னுடைய யூ-டியூப்பில் புகழ்ந்து வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றதற்கு விராட் கோலியின் திறமையே காரணம் என்றும் புகழ்ந்திருந்தார்.
சோயிப் அக்தர் விளக்கம்
இந்நிலையில் சோயிப் அக்தர் குறித்து முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கின் பேச்சு இடம்பெற்ற வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதை சுட்டிக்காட்டிய சோயிப் அக்தர் அதுகுறித்து தன்னுடைய யூடியூபில் பேசி விளக்கம் அளித்துள்ளார்.
கலந்துரையாடலில் சேவாக் பேச்சு
கடந்த 2016ல் நகைச்சுவை நடிகர் விக்ரம் சதாயேவுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீரேந்திர சேவாக், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் இந்திய அணி வீரர்கள் குறித்து தொடர்ந்து புகழ்வதாகவும், இந்தியாவில் தொழில் துவங்கி பணம் சம்பாதிக்கும் ஆசையிலேயே அவர் இவ்வாறு செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
"இந்தியாவில் இருந்து அல்ல"
இந்த வீடியோ குறித்து தற்போது தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள அக்தர், பணம் அல்லாவிடமிருந்துதான் கிடைக்கும் என்றும் இந்தியாவிலிருந்து அல்ல என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நகைச்சுவை என்று சமாளிப்பு
தொடர்ந்து பேசிய சோயிப் அக்தர், சேவாக்கின் தலையில் உள்ள முடியைவிட தன்னிடம் அதிகளவில் பணம் உள்ளதாக வம்பிழுத்துள்ளார். உடனடியாக இதை நகைச்சுவைக்காக கூறியதாகவும் சமாளித்துள்ளார்.