தீவிர கவனம் செலுத்த வேண்டும்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதியிலிருந்து விளையாடாமல் வீட்டில் முடங்கியுள்ளனர் கிரிக்கெட் வீரர்கள். இதையடுத்து தற்போது மீண்டும் போட்டிகளையும் முன்னதாக பயிற்சி ஆட்டங்களையும் நடத்த பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் மைதானத்திற்கு திரும்பும் பௌலர்களை தீவிர கவனத்துடன் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் பௌலர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இர்பான் பதான் எச்சரிக்கை
கடந்த மாதத்தில் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் பல்கார் மாவட்டத்தின் போய்சர் மைதானத்தில் மீண்டும் தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் ஐபிஎல்லாக இருந்தாலும், இந்திய அணியாக இருந்தாலும் பௌலர்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், கடந்த 2 மாதங்களாக முடங்கியுள்ள பௌலர்களுக்கு எளிதாக காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பதான் கூறியுள்ளார்.
சிறப்பான கவனம் வேண்டும்
காயம் மேலாண்மை என்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ள பதான், இதைவைத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அனைத்து பௌலர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு ஐபிஎல், இந்திய அணியின் சர்வதேச மற்றும் உள்ளூர் அணிகளில் 15 பேர் கொண்ட டீமில் 4 முதல் 6 பௌலர்கள் உள்ள நிலையில், அவர்கள்மீது சிறப்பான கவனம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐசிசி வழிகாட்டுதல்
சர்வதேச அளவில் அணியில் இடம்பெற்றுள்ள பௌலர்கள் மீது தனி கவனத்தை ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் அணியும் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் ஐசிசி தன்னுடைய வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது. பயிற்சி ஆட்டங்களின்போது முதுகுத்தண்டு பிராக்சர் போன்றவை ஏற்படாத வண்ணம் காய மேலாண்மையை அணிகள் பின்பற்ற வேண்டும் என்றும் ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.