எஸ்ஆர்ஹெச் வெளியேறிவிட்டதா?
ஐபிஎல் தொடரில், இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை மொத்தம் 10 போட்டிகளில் விளையாடி, அதில் 2ல் மட்டும் வெற்றிப் பெற்றுள்ள சன் ரைசர்ஸ் கையில் வைத்திருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை 4. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வென்றால், மொத்தம் 12 புள்ளிகள் பெறும். டாப் 3 மூன்று இடங்களில் உள்ள சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளின் அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுக்களைப் பொறுத்து, எஸ்ஆர்ஹெச் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். ஆனால், அதற்கு அவர்கள் மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.
சாம் கர்ரன் நீக்கம்
அந்த வகையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில், சாம் கர்ரனுக்கு பதில் பிராவோ மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் காயம் காரணமாக பிராவோ விலகியிருக்க, சாம் கர்ரன் விளையாடினார். ஆனால், அந்த போட்டியில் சாம் ரன்களை வாரி வழங்கினார். இந்நிலையில், இன்றைய போட்டியில், ஹேசில்வுட்டுக்கு பதில் சாம் கர்ரன் மீண்டும் களமிறக்கப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில், தோனி அந்த முடிவை எடுக்கவில்லை. சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (w/சc), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடைசி இடம்
அதேசமயம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜேசன் ராய், ரிதிமான் சாஹா (w), கேன் வில்லியம்சன் (c), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 10 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதற்கு நேர்மாறாக, 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
வெற்றிக்கு காரணம்
இந்நிலையில், பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் முதல் 2 ஓவர்களில் அடக்கி வாசித்தது. அதன் பிறகு மூன்றாவது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இதில், 2 மெகா சிக்ஸர்களை சாஹா பறக்கவிட்டார். மற்றொரு தொடக்க வீரர் ஜேஸன் ராய் பொறுமையாக இன்னிங்ஸை தொடங்கினார். ஹைதராபாத் அணிக்காக தனது முதல் போட்டியில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜேஸன் களமிறங்கினார். தனது முதல் மேட்சிலேயே 60 ரன்கள் விளாசி, ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அன்றைய போட்டியில் 8 பவுண்டரிகளையும் 1 சிக்ஸரையும் பறக்கவிட்டிருந்தார். இதனால், இன்று சென்னை அணிக்கு எதிராகவும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வயசாயிடுச்சா?
இந்நிலையில், ஆட்டத்தின் 4வது ஓவரை ஹேசில்வுட் வீசினார். இதில் முதல் பந்தை, ஜேஸன் புல் ஷாட் ஆட முயற்சி செய்தார். அப்போது பந்து அவரது கிளவுஸில் பட்டு, தோனிக்கு அருகே சென்றது. தோனியைப் பொறுத்தவரை அது பிடித்திருக்க வேண்டிய கேட்ச் தான். சற்று கடினமான கேட்சும் கூட. பழைய தோனியாக இருந்திருந்தால், ஜேஸன் அவுட்டாகியிருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால், இன்று தோனி டைவ் அடித்தும், அதனை பிடிக்க முடியவில்லை. பந்து பவுண்டரிக்கு சென்றது. எனினும், அம்பயர் அதற்கு leg byes கொடுத்தார். பந்து கிளவுஸில் பட்டதோ இல்லையோ, ஆனால் தோனியால் முன்பு போல் வேகமாக இருக்க முடியவில்லை என்பதே உண்மை!. எனினும், அதே ஓவரின் மூன்றாவது பந்தில், எட்ஜ் ஆகி தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜேஸன் ராய். விதி வலியது!