ஆட்ட நாயகன் கர்ரன்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நேற்றைய போட்டியில் அவுட்டாகாமல் 95 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றுள்ளார் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன். தனியாளாக, சிறப்பான பினிஷராக நேற்றைய தினம் இவர் இங்கிலாந்து அணியை போட்டியின் இறுதிவரை அழைத்து சென்றார்.
இந்தியா வெற்றி
போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்த நிலையில் இறுதி ஓவரை பௌலிங் செய்த இந்திய யார்க்கர் கிங் நடராஜன், வுட்டின் விக்கெட்டை ரன்அவுட் செய்தார். இதையடுத்து ஆட்டத்தின் போக்கு இந்தியாவின் வசம் வந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டது.
ஆபத்பாந்தவன் கர்ரன்
200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தவித்தபோது, ஆபத்பாந்தவனாக கைகொடுத்து அணியை மீட்டார் சாம் கர்ரன். 8வது விக்கெட்டில் இத்தகைய ரன் குவிப்பு நேற்றைய போட்டியில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் சாதனையாக பார்க்கப்பட்டது.
தன்னுடைய ஆட்டம் மகிழ்ச்சி
இந்நிலையில் போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்ரன், நேற்றைய போட்டியின் தோல்வி ஏமாற்றத்தை அளித்தாலும் தன்னுடைய ஆட்டம் மகிழ்ச்சியளித்ததாக குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்காக இதுபோன்ற ஆட்டத்தை அளிக்க இதற்கு முன்னதாக இத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் நிரூபித்த நடராஜன்
மேலும் நடராஜன் நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசியதாகவும் 6 பந்துகளை மட்டுமே கொண்டு, ஆட்டத்தை மாற்றி, தான் மிகச்சிறப்பான பௌலர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் கர்ரன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடர் தனக்கு மிக சிறப்பான அனுபவங்களை அளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.