சிறந்த தேர்வுக் குழு தலைவர்
இந்திய அணியின் சிறந்த தேர்வுக் குழு தலைவராக விளங்கியவர் திலிப் வெங்சர்க்கார். இந்திய அணியில் கங்குலி கேப்டன் பதவியை இழந்த பின் பெரும் மாற்றம் ஏற்பட்டது. டிராவிட், கேப்டனாக பொறுப்பேற்றாலும், 2007 உலகக்கோப்பை தோல்விக்கு பின் இளம் கேப்டன் ஒருவர் தேவைப்பட்டார்.
இரண்டு முக்கிய வீரர்கள்
அப்போது திலிப் வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக் குழு தான் தோனியை கேப்டனாக அறிவித்தது. அதே போல, இதே திலிப் வெங்சர்க்கார் தான் கேப்டன் தோனியிடம், அண்டர் 19 அணியில் ஆடி இருந்த விராட் கோலியை தேசிய அணியில் சேர்க்க வேண்டும் என வற்புறுத்தி சேர்த்தார்.
காரணம் இதுதான்
திலிப் வெங்சர்க்காரின் இந்த சிறப்பான தேர்வுகளுக்கு காரணம், முன்பு இந்திய கிரிக்கெட்டில் இருந்த திறமையை அடையாளம் காணும் குழுவில் அவர் தலைவராக இடம் பெற்று இருந்தது தான். அங்கே தான் அவர் தோனியை அடையாளம் கண்டுள்ளார்.
பீகார் அணி ஆடியது
திறமையை அடையாளம் காணும் குழுவில் இருந்த முன்னாள் வங்காள அணி கேப்டன் பிரகாஷ் போதார் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற அண்டர் 19 போட்டிகளை காண சென்றார். அந்த போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு பக்கவாட்டில் மற்றொரு மைதானத்தில் பீகார் அணி ஆடிய ஒருநாள் போட்டி நடைபெற்று வந்தது.
யார் அது?
அப்போது பீகார் அணி ஆடிய மைதானத்தில் இருந்து சில பந்துகள், அண்டர் 19 அணி ஆடி வந்த மைதானத்துக்குள் வந்து விழுந்தது. அதைக் கண்ட பிரகாஷ் போதார் யார் இத்தனை தூரம் சிக்ஸ் அடிப்பது என் கேட்டுள்ளார். தோனியை கை காட்டி உள்ளனர்.
விதிகளால் சிக்கல்
திறமையை கண்டறியும் குழுவால் அண்டர் 19 வீரர்களை மட்டுமே தேர்வு செய்து பயிற்சி அளிக்க முடியும். ஆனால், தோனி அப்போது 21 வயதை எட்டி இருந்தார். எனவே, விதிப்படி அவரை சிறப்பு பயிற்சி அளிக்கும் முகாமுக்கு அனுப்ப முடியாது.
திறமை தான் முக்கியம்
ஆனால், தோனி பற்றி பிரகாஷ் போதார் மூலம் அறிந்த திலிப் வெங்சர்க்கார் திறமை தான் முக்கியம் என முடிவு செய்து, தோனிக்கும் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்தார். அடுத்த சில ஆண்டுகளில் தோனி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியின் திறமை
அதே போல, திறமையை கண்டறியும் குழு சார்பாக பல அண்டர் 16, அண்டர் 19 போட்டிகளை நேரில் கண்டுள்ளார் திலிப் வெங்சர்க்கார். அப்போது விராட் கோலியின் திறமையை அவரது இள வயதிலேயே அடையாளம் கண்டுள்ளார் திலிப் வெங்சர்க்கார்.
தயாராக இருந்த கோலி
பின்னர், இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக திலிப் வெங்சர்க்கார் பதவி ஏற்ற பின் விராட் கோலியை ஆஸ்திரேலியாவிற்கு பயிற்சிப் போட்டிகளில் ஆட அனுப்பி உள்ளார். அங்கே வேண்டுகோளுக்கு இணங்க துவக்க வீரராக ஆட கோலி சம்மதம் கூறியதை கண்ட வெங்சர்க்கார், அவரை இந்திய அணியில் தேர்வு செய்யலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.
தேர்வுக் குழுவில் இடம்பெற வேண்டும்
திறமையை அடையாளம் காண்பது என்பது ஒரு கலை. அதில் திலிப் வெங்சர்க்கார் சிறந்து விளங்கி உள்ளார். தோனி, விராட் கோலி என இரண்டு கேப்டன்களை இந்திய அணிக்கு அழைத்து வந்ததில் பெரும் பங்கு வகித்துள்ளார். அவரை மீண்டும் தேர்வுக் குழுவில் இடம் பெறச் செய்ய வேண்டும் என சிலர் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.