டி20 தொடர்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையில் சர்வதேச டி20 போட்டித் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகளை இரு அணிகளும் இணைந்து ஆடியுள்ளன. இதில் முறையே 1 மற்றும் 12 ரன்களை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் எடுத்துள்ளார்.
சொதப்பிய பின்ச்
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி 219 ரன்களை அடித்திருந்த நிலையில் ஆரோன் பின்ச் வெறுமனே 12 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதையடுத்து ஆரோன் பின்ச்சின் ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ரிச்சர்ட்சன் பாராட்டு
இந்நிலையில் அவர் துப்பாக்கி போன்று வலிமையானவர் என்றும் மீண்டும் தன்னுடைய பார்மிற்கு வருவார் என்றும் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இத்தகைய சூழலை ஒவ்வொரு வீரரும் கடந்து வர வேண்டிய சூழல் உருவாகும் என்றும் அவரது மனவலிமை இந்த நெருக்கடியிலிருந்து அவர் வெளிவர உதவும் என்றும் ரிச்சர்ட்சன் குறிப்பிட்டுள்ளார்.
495 ரன்கள்
மேலும் அடுத்து வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்றும் ரிச்சர்ட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல், பிபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் கடந்த 29 போட்டிகளில் 495 ரன்களை மட்டுமே ஆரோன் பின்ச் அடித்துள்ளார். இதன் சராசரி 17.06ஆக உள்ளது.