36 ரன்களை எடுத்து இந்தியா சொதப்பல்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்று முடிந்துள்ள பகலிரவு போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களை எடுத்து இந்தியா மோசமான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தியுள்ளது.
கவுதம் கம்பீர் ஆலோசனை
இதையடுத்து இந்தியாவின் பேட்டிங் ஆர்டரில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். இதேபோல முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீரும் தன்னுடைய ஆலோசனைகளை இந்திய அணிக்கு வழங்கியுள்ளார்.
குறைந்துள்ள தன்னம்பிக்கை
கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள கம்பீர், ஆனால் தற்போது அவருடைய தன்னம்பிக்கை அளவு குறைந்துள்ளதால் அவருக்கு பதிலாக சுப்மன் கில் விளையாடுவது சிறப்பாக இருக்கும் என்றும் 3வதாக புஜாரா விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கேப்டன் விளையாட வேண்டும்
கோலி இல்லாத நிலையில் அவரது இடத்தில் தற்போதைய கேப்டன் அஜிங்க்யா ரஹானே விளையாட வேண்டும் என்றும் அவர் கேப்டனாக முன்னிருந்து அணியை வழிநடத்த வேண்டியுள்ளதாகவும் கம்பீர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல கேஎல் ராகுல் 5வது இடத்திலும் 6வது 7வது இடங்களில் பந்த் மற்றும் ஜடேஜாவும் 8வது இடத்தில் அஸ்வின் விளையாட வேண்டும் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.
3 வேகப்பந்து வீச்சாளர்கள்
இதேபோல ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஸ்வின் ஆகிய ஸ்பின்னர்களுடன் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் பௌலிங்கில் இடம்பெற வேண்டும் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். 4 போட்டிகளை கொண்ட ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியுள்ளது.