ரஹானே கேப்டன்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு தன்னுடைய குழந்தை பிறப்பிற்கென விராட் கோலி நாடு திரும்பிய நிலையில், அடுத்த 3 போட்டிகளை கேப்டனாக பொறுப்பேற்று அஜிங்க்யா ரஹானே வழிநடத்தினார்.
ரஹானேவிற்கு பாராட்டு
இந்த போட்டிகளில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த இமாலய வெற்றியை அடுத்து பல்வேறு தரப்பினரும் ரஹானேவிற்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அவர் அணியை சிறப்பாக வழிநடத்தி இந்திய அணிக்கு வெற்றியை பரிசளித்துள்ளதாக கூறி வருகின்றனர்.
ரஹானேவை நியமிக்க அறிவுறுத்தல்
இந்நிலையில் ரஹானேவின் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ள நிலையில், அவரை அடுத்த கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் டெஸ்ட் போட்டிகளுக்காவது கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ரஹானே திட்டவட்டம்
இதனிடையே, கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் என்றும் தான் எப்போதும் துணை கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவேன் என்றும், விராட் இல்லாத காலங்களில் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தி வெற்றி பெற செய்வேன் என்றும் ரஹானே கூறியுள்ளார்.
சிறப்பான முடிவுகள்
மேலும் விராட் கோலி மிகவும் புத்திகூர்மை மிக்க கேப்டன் என்றும் தங்கள் இருவருக்குள்ளும் சிறப்பான புரிதல் காணப்படுவதாகவும் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார். மைதானத்தில் உடனுக்குடன் சிறப்பான முடிவுகளை விராட் கோலி மேற்கொண்டு அணியை வெற்றிபெற செய்பவர் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.