ஏமாற்றம்
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ப்ரித்வி ஷா 13, ஷிகர் தவான் 29, இஷான் கிஷான் 1 ரன்னும், மணிஷ் பாண்டே 37 ரன்களும் எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 53 ரன்களை விளாசி அவுட்டானார்.
பார்ட்னர்ஷிப்
193 ரன்களுக்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த தீபக் சாஹர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஜோடி சிறப்பாக விளையாடி 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இக்கட்டான சூழலில் அணி இருந்த போது ஒற்றை ஆளாக போராடிய தீபக் 69 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரின் விக்கெட் மட்டும் விழுந்திருந்தால் தோல்வி உறுதியாகியிருக்கும்.
விரைந்து வந்த ராகுல்
இந்நிலையில் தீபக் சஹார் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததற்கு பின்னால் டிராவிட்டின் திட்டம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. போட்டியின் 45வது ஓவரின் போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு அறையில் இருந்து அவசர அவசர மாக வீரர்கள் அமரும் டக் அவுட்டிற்கு வந்தார். அங்கு பேட்ஸ்மேன்களுக்கு குளிர்பானம் கொண்டு செல்ல உட்காந்திருந்த தீபக் சாஹரின் சகோதரர் ராகுல் சாஹரிடம் முக்கிய செய்தி ஒன்றை கூறிச் சென்றுள்ளார்.
அட்வைஸ்
அதாவது, தீபக் சாஹர் செட்டில் ஆனவுடன் சற்று ஆக்ரோஷமாக விளையாடுவதாக தெரிகிறது. தற்போது அத்தகைய ஷாட்கள் தேவையில்லாத ஒன்று. எனவே ரிஸ்கான ஷாட்களை ஆடி எக்காரணத்தை கொண்டும் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. இதனை தீபக் சாஹரிடம் கூறிவிடு என அறிவுரை கூறியுள்ளார். இதனையடுத்து ஆட்டத்தின் 47வது ஓவரின் போது குளிர்பானம் கொடுக்க சென்ற ராகுல், தனது சகோதரரிடம் அதனை கூற தீபக் சாஹர் மீண்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.