இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட்
29 வயதான ஹெதர் நைட், 7 டெஸ்ட், 101 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இங்கிலாந்தில் இப்போது 14,543 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹெதர் நைட் வாலண்டியராக, மருந்துகளை அனுப்புவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளார்.
மருத்துவ சேவைக்கு உதவி
இதுகுறித்து ஹெதர் நைட் பிபிசிக்கு எழுதியுள்ள கட்டுரையில், தேசிய சுகாதார சேவையில் வாலண்டியராக இணைந்துள்ளேன். இப்போது நான் நிறைய ப்ரீயாகத்தான் உள்ளேன். எனவே என்னால் முடிந்ததை செய்ய முடிவெடுத்து இதில் இணைந்துள்ளேன். எனது சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் டாக்டர்களாக உள்ளனர். மேலும் தேசிய சுகாதார சேவையில் எனது நண்பர்கள் சிலரும் உள்ளனர். எனவே அவர்கள் எவ்வளவு கடினமாக போராடி வருகிறார்கள் என்பதை நான் அறிவேன் என்று கூறியுள்ளார்.
விழிப்புணர்வு ஊட்டுவேன்
நான் மக்களிடம் பேசி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். மருந்துகள் சரிவர செல்கிறதா என்பதையும் உறுதிப்படுத்துவேன். தனித்து இருப்பதன் அவசியம் குறித்து மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு தேவை. அதை நான் செய்வேன். தற்போதைய சூழலில் அதுதான் மிக மிக முக்கிமயானது. எனது நண்பர்களில் ஒருவரான எலின், ராயல் லிவர்பூல் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு வார்டில் பணியாற்றி வருகிறார் என்றும் ஹெதர் நைட் கூறியுள்ளார்.
பாசிட்டிவ் எனர்ஜி தேவை
அவருக்கு புத்துணர்ச்சி ஊட்டவும், மகிழ்ச்சியைக் கொடுக்கவும் நாங்கள் அவ்வப்போது ஏதாவது பாடல்களை அவருக்கு அனுப்பி வைத்து அவரை உற்சாகப்படுத்தி வருகிறோம். அவருக்கும் அது புதிய உணர்வையும், பாசிட்டிவ் எனர்ஜியையும் அளிக்கும் என்று கூறியுள்ளார் ஹெதர் நைட். இந்த வாலண்டியர் திட்டத்தில் இதுவரை 5 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெதர் நைட் சமீபத்தில்தான் மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக ஆஸ்திரேலியா போயிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.