ஹெர்ஷல் கிப்ஸ்
தென்னாப்பிரிக்க அணியில் ஒரு காலத்தில் கோலோச்சி வந்த பேட்ஸ்மேன் தான் ஹெர்ஷல் கிப்ஸ். அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த பின் அவரை அணியில் இருந்து நீக்கினர்.
பங்களதேஷ் பிரீமியர் லீக் பயிற்சியாளர்
அதன் பின், அவர் பயிற்சியாளராக மாற முயற்சி செய்து சில உள்ளூர் அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். பங்களதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரில் சில்ஹெட் தண்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கிறார்.
கனவு பலிக்காது
இதுபோன்ற சிறிய அணிகளை சிறப்பாக வழிநடத்தி ஐபிஎல் மற்றும் தேசிய அணிகளின் பயிற்சியாளர் பதவிகளை பிடிக்கலாம் என கிப்ஸ் கனவு கண்டாலும், அது நடக்காது என்றே தெரிகிறது. காரணம், சில்ஹெட் தண்டர்ஸ் அணியின் மிக மோசமான செயல்பாடு தான்.
படுதோல்வி
சில்ஹெட் தண்டர்ஸ் அணி தான் ஆடிய எட்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் அந்த அணி அடுத்த கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை இழக்கும்.
கிப்ஸ் புலம்பல்
இந்த நிலையில், சில்ஹெட் தண்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக தான் சந்திக்கும் பிரச்சனையை சொல்லி புலம்பித் தள்ளி இருக்கிறார் ஹெர்ஷல் கிப்ஸ். அந்த அணியில் பல உள்ளூர் வங்கதேச வீரர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.
கிப்ஸ் விளக்கம்
ஆங்கிலம் தெரியாத வீரர்களால் பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரில் தன் அணிக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உதாரணத்துடன் விளக்கிக் கூறி இருக்கிறார் கிப்ஸ்.
அந்த வீரர்
ரூபல் மியா என்ற உள்ளூர் வங்கதேச வீரர், சில்ஹெட் தண்டர்ஸ் அணியில் தன் முதல் பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியில் அறிமுகம் ஆனார். அந்தப் போட்டியில் அவர் 44 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
ஆமை வேக பேட்டிங்
ரூபல் மியா ஒரு கட்டத்தில் 50 ஸ்ட்ரைக் ரேட்டுடன் டி20 போட்டியில் ஆமை வேகத்தில் ஆடிக் கொண்டு இருந்தார். அப்போது இடைவேளையில் அவரிடம் சென்ற பயிற்சியாளர் கிப்ஸ், "என்ன நடக்கிறது? 28 பந்துகளில் 14 ரன்கள் தான் எடுத்து இருக்கிறாய்?" என கேட்டுள்ளார்.
வெறுத்துப் போன கிப்ஸ்
ஆங்கிலம் புரியாத நிலையில் ரூபல் மியா தலையை இல்லை என்பது போல ஆட்டி இருக்கிறார். அதைக் கண்டு வெறுத்துப் போய் இருக்கிறார் கிப்ஸ். அது அந்த வீரரின் தவறு மட்டுமல்ல, ஆனால் இது தான் நிதர்சனம் என புலம்பி இருக்கிறார் கிப்ஸ்.
வெறுப்பூட்டும் விஷயம்
மேலும், "உள்ளூர் வீரர்களில் நிறைய பேருக்கு ஆங்கிலம் புரியவில்லை. எனவே, எல்லா நேரங்களிலும் ஒரு விஷயத்தை சொல்வது எனக்கு கடினமாக உள்ளது. இது ஒரு வெறுப்பூட்டும் விஷயம். நான் அவர்களுடன் பேசும்போது அவர்கள் கேட்கிறார்கள் என்பதைக் காண்கிறேன். ஆனால், அவர்கள் அதை புரிந்து கொள்வதில்லை" என்றார் கிப்ஸ்.