|
ரஞ்சி ட்ராபி போட்டி
ரஞ்சி ட்ராபி தொடரின் ஒன்பதாம் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் கர்நாடகா - பரோடா அணிகள் இடையே ஆன போட்டியின் இடையே நேரலையில் இந்தி வர்ணனை செய்யப்பட்டு வந்தது. அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த இருவர் சுனில் கவாஸ்கர் குறித்து பேசத் துவங்கினர்.
சுனில் கவாஸ்கர் வர்ணனை
சுனில் கவாஸ்கர் சமீபத்தில் ரஞ்சி தொடரில் இந்தி வர்ணனை செய்து வருகிறார். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் வீரர் இந்தியில் வர்ணனை செய்வதையும், "டாட் பால்" என்பதை அவர் இந்தியில் "பிந்தி பால்" என குறிப்பிட்டதையும் அந்த இரு வர்ணனையாளர்களும் பாராட்டி பேசினர்.
இந்தி மொழி திணிப்பு
சுனில் கவாஸ்கரை பாராட்டிப் பேசி வந்த அவர்கள், அப்படியே இந்தி மொழி பற்றி பேசத் துவங்கினர். அவர்களில் ஒருவர் இந்தி தான் இந்திய மக்களின் "தாய் மொழி" என்று கூறியதோடு, அதை ஒவ்வொரு இந்தியனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இந்தியாவில் வாழ்ந்தால்…
அதற்கு மற்றொருவர், "சிலர் கோபத்தோடு கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்தியில் பேச வேண்டும் என கேட்கிறார்கள். நீங்கள் இந்தியாவில் வாழ்ந்தால், நீங்கள் நம் தாய் மொழியான இந்தியை பேச வேண்டும்" என்றார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் பேச்சாக அமைந்தது.
வீடியோ காட்சி பரவியது
ரஞ்சி ட்ராபி தொடர் இணையத்தில் நேரலை செய்யப்படுவதால் இந்த வர்ணனை இடம் பெறும் வீடியோ காட்சி வேகமாக பரவியது. கர்நாடகா அணி ஆடிய போட்டி என்பதால், குறிப்பாக கன்னடர்கள் இடையே இந்த சம்பவம் பரவியது.
கடும் எதிர்ப்பு
தமிழர்கள் மட்டுமல்லாது கன்னடர்களும் பல காலமாக இந்தி திணிப்பை எதிர்த்து வருபவர்கள் என்பதால், பலரும் அந்த இரு வர்ணனையாளர்களுக்கு எதிராக கொந்தளித்தனர். பின் தமிழர்களும் இந்த இந்தி திணிப்பு வர்ணனை பற்றி அறிந்து தங்கள் எதிர்ப்பை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
|
இந்தி தெரிய வேண்டுமா?
அந்த வீடியோ காட்சியை பகிர்ந்துள்ள ஒருவர் "ஒவ்வொரு இந்தியரும் இந்தியை அறிந்து கொள்ள வேண்டுமா? பிசிசிஐ நீங்கள் என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்? இந்தியை திணிப்பதை கைவிடுங்கள். தவறான செய்தியை பரப்பாதீர்கள். ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தி தெரிய வேண்டுமா? என பொங்கி உள்ளார்.
மன்னிப்பு கேட்டார்
அந்த வர்ணனையாளர்களில் ஒருவர் மன்னிப்பு கேட்டதாக ஒரு தகவல் வலம் வருகிறது. அதையும் பலர் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவர்கள் மீது பாய்ந்து வருகிறார்கள். குறிப்பாக, பிசிசிஐ மீதும் அவர்களது கோபம் உள்ளது.
|
தவறான உச்சரிப்பு
சிலர் அந்த வர்ணனையாளர்கள், "கர்நாடகா" "கன்னடா" என்பதை "கர்நாடக்" "கன்னட்" என உச்சரிப்பதை சுட்டிக் காட்டி, அவர்கள் படிக்காதவர்கள் போல உச்சரிக்கிறார்கள் என தன் கோபத்தை கொட்டி உள்ளார். அதற்கு மற்றொருவர் இன்னொரு அதிரடி பதிலை கூறி உள்ளார்.
|
குறி வைத்து..
ஹரியானா என்பதை "ஹரியான்" என்றும், லூதியானா என்பதை "லூதியான்" என்றும் அவர்கள் உச்சரிக்கவில்லை. கர்நாடகா மற்றும் கன்னடா என்பதை மட்டுமே குறி வைத்து இப்படி உச்சரித்து வருகிறார்கள் என தன் கோபத்தை கொட்டி உள்ளார். தமிழ்நாடு என்பதை "தமிழ்நாட்" என இந்தியில் உச்சரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய் மொழி இந்தி அல்ல
இந்தியாவில் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் 43.63 சதவீதம் மக்கள் மட்டுமே. இந்தியல்லாத மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் 56.37 சதவீதம் ஆவர். அந்த கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இந்தி தேசிய மொழி இல்லை என்பதையும், இந்தியல்லாத மொழியை தாய் மொழியாக கொண்டவர்களே இந்தியாவில் அதிகம் என்பதையும் தெரிந்து கொண்டால் நல்லது.