அபார தொடக்கம்
தொடக்க வீரர் இஷான் கிஷன் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். எனினும் , ராகுல் திரிபாதி தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படாமல் பார்த்து கொண்டார். பந்துவீசுவதற்கு முன்பே ராகுல் திரிபாதி அதனை கணித்து பவுண்டரிக்கு விரட்டினார். மறுமுனையில் சுப்மன் கில்லும் பவுண்டரி சிக்சர் என விளாசினார்.
அபார கேட்ச்
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி 22 பந்தில் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனையடுத்து களத்திற்கு வந்து சூர்யகுமார் யாதவ், வழக்கம் போல் எரிமலை போல் வெடிக்க தொடங்கினார். சூர்யகுமார் யாதவ் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 13 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் பிராஸ்வெல்லின் அபார கேட்சால் பெவிலியன் திரும்பினார்.
சிதறடித்த பேட்டிங்
இதனையடுத்து, ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார். குறிப்பாக நியுசிலாந்து வீரர்கள் எப்படி பந்துவீசினாலும் பந்தை பார்வையாளர்கள் மாடத்திற்கு விரட்டினார். மறுமுனையில் ஹர்திக் பாண்டியாவும் காட்டு தனமாக பேட்டை சுற்ற ரன்கள் மளமளவென உயர்ந்தது.
சாதனை சதம்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை 35 பந்துகளில் பூர்த்தி செய்த சுப்மன் கில், அடுத்த 50 ரன்களை 19 பிந்துகளில் அடிக்க தனது முதல் சதத்தை டி20 கிரிக்கெட்டில் அடித்தார். இதன் மூலம் அனைத்து விதமான போட்டியிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஹர்திக் பாண்டியா 30 ரன்களில் வெளியேற, சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 234 ரன்களுக்கு 4 விக்கெட்டை எடுத்தது.இது டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் 5வது அதிகபட்ச ஸ்கோராகும்.