வியூகம்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த ஜூன் மாதம், நியூசிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஆனால், இந்திய அணி ஏகத்துக்கும் சொதப்ப தோல்வியே பரிசாக கிடைத்தது. அதன் பிறகு ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு இப்போது இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள வியூகம் வகுத்து வருகிறது.
தீவிர பரிசோதனை
இதற்கிடையில், பயிற்சியின் போது சிராஜ் வீசிய பந்து மாயங்க் அகர்வால் ஹெல்மெட்டை பதம்பார்க்க, அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "டிரன்ட்பிரிட்ஜில் வலைப்பயிற்சியி்ன்போது சிராஜ் வீசிய பந்து மாயங்க் ஹெல்மெட்டில் தாக்கியது. மருத்துவக் குழுவினர் அவருக்கு கன்கஸன் பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து மாயங்க் நீக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருந்தாலும், உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார். இதுகுறித்து இந்திய துணைக் கேப்டன் ரஹானே கூறுகையில், "அணியில் உள்ள 21 வீரர்களும் நலமுடன், உடற்தகுதியுடன் விளையாடத் தயாராக உள்ளனர். விரைவில் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார். மாயங்க் தற்போது வெளியேறி இருப்பதால், ரோஹித் ஷர்மாவுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க அதிகம் வாய்ப்புள்ளது.
பிளேயிங் லெவன்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பண்ட், ஆர் அஷ்வின், ஷர்துல் தாக்கூர்/ஆர் ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெறலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்கிய ஜடேஜாவால் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை என்பதால், இங்கிலாந்துக்கு எதிராக ஷர்துல் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேசமயம், அஷ்வின் நிச்சயம் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய வீரர் யார்?
இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலர் பிராட் ஹாக் தனது யூடியூபில், "கடைசியாக 2018 ல் இந்தியா இங்கிலாந்து சென்றபோது, அவர்கள் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தனர். ஆனால் இது ஒரு புதிய தொடர். அவர்கள் அங்கு இரண்டு மாதங்களாக இருக்கிறார்கள். அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளனர். அவர்கள் நிறைய கடினமான விளையாட்டுகளை விளையாடியுள்ளனர். எனவே, எந்த சாக்கு போக்குக்கும் இடமில்லை. இங்கிலாந்து நிலைமைகளுக்கு ஏற்ப அவர்கள் விளையாட வேண்டும். முகமது ஷமியைப் பாருங்கள், அவர் கடைசி நேரத்தில் அற்புதமாக பந்து வீசுகிறார். அவரது பந்துகளில் அவுட்சைடு எட்ஜ் கிடைக்கிறது. ஆனால், இரண்டு கேட்சுகள் வீணடிக்கப்பட்டன. ஆனால் இந்தத் தொடரில் ஷமி மிக முக்கிய வீரராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தரும் முக்கியமான வீரராக இருக்கப் போகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் பந்துவீசியது போல் அவருக்கு அதிக அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தகவமைப்பில் கில்லாடி
உண்மையில், ஹாக் சொல்வது சரி தான். எனர்ஜியை ஹோல்ட் செய்து, அணிக்கு தேவைப்படும் நேரத்தில் ரிலீஸ் செய்து எதிரணியை மிரள வைப்பது தான் ஷமியின் சாமர்த்தியம். இதர இந்திய பவுலர்கள் தேவையில்லாத நேரத்தில் கூட அதிக சிரத்தை எடுத்து பந்துவீசி களைத்து போய் விடுவார்கள். ஆனால், எங்கு, எப்போது, எந்த வேகத்தில் வீச வேண்டும்? எந்த நேரத்தில் பவுன்ஸ் வீச வேண்டும்? எந்த ஓவரின் அனைத்து பந்துகளையும் ஸ்லோவாக வீச வேண்டும்? எந்த நேரத்தில் எனர்ஜியை சேமித்து வைக்க வேண்டும்? எந்த நேரத்தில் அதனை பயன்படுத்த வேண்டும்? என்ற ஒர்க் அவுட் ஷமியிடம் தெளிவாக இருக்கும். பும்ராவிடம் இருந்து கூட அவர் இந்த இடத்தில் தான் வேறுபடுகிறார். விக்கெட் விழுகிறதோ இல்லையோ.. ஷமியின் பந்துவீச்சில் இன்டென்ட் நிச்சயம் இருக்கும். அதுதான் ஒரு கேப்டனுக்கு தேவை. எதற்கு பந்துவீசுகிறோம் என்பது கூட தெரியாமல் சில பவுலர்கள் பந்து வீசுவார்கள். அதை மணிக்கு 148 கி.மீ வேகத்தில் வீசுவார்கள். ஆனால், அதனால் அணிக்கு எந்த வகையிலும் பயன் இருக்காது. ஆனால், ஷமி போன்று இன்டென்ட்டுடன் பந்து வீசுபவர்களே, தேவைக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு, அணிக்கு தேவைப்படும் நேரத்தில் கேப்டனுக்கு கைக்கொடுப்பார்கள்.
இந்த இங்கிலாந்து டெஸ்ட்டில் ஷமி நிச்சயம் ஒரு இம்பேக்ட் ஏற்படுத்தக்கூடிய பிராண்ட் என்பதில் துளியும் சந்தேகமில்லை!