ஐசிசி உதவி இல்லை
அங்கே கிரிக்கெட் அமைப்புக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் எப்போதும் நிதி பற்றாக்குறை தான். ஹாங்காங் அரசும் கிரிக்கெட் விளையாட்டை பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஐசிசி-யும் இந்த கத்துக்குட்டி அணிக்கு பெரிய உதவிகள் செய்ய முன்வரவில்லை. ஐசிசி உதவாதது ஒன்றும் அதிசயமில்லை. அவர்கள் பெரிய, பணக்கார அணிகளுக்கு தான் முன்னுரிமை வழங்குவார்கள்.
ஓய்வு முடிவு
இந்த நிலையில், கிரிக்கெட் மட்டும் ஆடிக் கொண்டு வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதிக்க முடியாத சூழல் ஹாங்காங்கில் நிலவுகிறது. இதை அடுத்து ஆஸ்திரேலியா நாட்டை பூர்விகமாக கொண்டவரும், தற்போது ஹாங்காங் அணியில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக இருப்பவருமான 21 வயது கிறிஸ் கார்டர் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
என்ன காரணம்?
இதற்கான காரணத்தை கூறியுள்ளார் அவர். "நான் ஏற்கனவே, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். ஆனால், இப்போது நாம் என்னவாக ஆக ஆசைபட்டோமோ அதை நோக்கி செல்ல வேண்டும் என நினைக்கிறேன். பைலட் ஆக வேண்டும் என்பதே என் ஆசை" என கூறியுள்ளார். மேலும், "ஹாங்காங் நாட்டில் கிரிக்கெட் வீரராக இருப்பது மிகவும் கடினம். இங்கே நிதி பற்றாக்குறை உள்ளது. ஹாங்காங் கிரிக்கெட் அமைப்புக்குள் இருப்பவர்கள் எங்களை முழு நேர கிரிக்கெட் வீரர்களாக ஆட வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு அரசு அல்லது ஐசிசி உதவவில்லை" என கூறுகிறார். தான் பார்க்கப்போகும் வேலையில் ஓய்வு கிடைத்தால் கிரிக்கெட் ஆடுவது பற்றி மீண்டும் சிந்திப்பேன் என கூறி இருக்கிறார்.
ஆட்டம் காட்டிய ஹாங்காங்
ஹாங்காங் அணி ஆசிய கோப்பை குரூப் சுற்றில் இந்தியாவுக்கு கடைசி வரை ஆட்டம் காட்டியது. அந்த போட்டியில் இந்தியா போராடி தான் வெற்றி பெற முடிந்தது. அந்த அணியின் கேப்டன் அன்ஷுமன் ராத் இந்தியாவின் ஓடிசாவை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.