ஆப்கானிஸ்தான் தொடர்
ஆப்கானிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தான் அணி அந்த மைதானத்துக்கு கட்டணம் செலுத்தி தன் சொந்த மைதானமாக பயன்படுத்தி வருகிறது.
ஆசை ஆசையாய்..
இந்த தொடரை காண ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவர் ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து லக்னோ வந்தார். அவர் பெயர் ஷேர் கான். ஆனால், இந்தியா வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எந்த ஹோட்டல், லாட்ஜ்ஜும் அவருக்கு அறை கொடுக்க மறுத்தன.
8 அடி ஷேர் கான்
அதற்கு முக்கிய காரணம் ஷேர் கானின் உயரம் தான். 8 அடி 2 இன்ச் உயரம் கொண்ட ஷேர் கான் பார்க்க வித்தியாசமாக இருந்ததால் அவருக்கு அறை தர மறுத்தன ஹோட்டல்கள்.
மூன்று நாட்கள் சுற்றினார்
இந்தியா வந்த நாள் முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் வீதி வீதியாய் சுற்றி சோர்ந்து போனார் ஷேர் கான். ஒருவரும் அறை கொடுக்க மறுத்தனர். அந்த நேரத்தில் வேறு வழியின்றி ஒரு முடிவு எடுத்தார்.
காவல்துறையை நாடினார்
காவல்துறை உதவியை நாடினார். நாகா காவல்துறையினரை அணுகிய ஷேர் கான், தான் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து மூன்று நாட்களாக அறை இல்லாமல் தவித்து வரும் கதையை காவல்துறையிடம் முறையிட்டு தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.
காவல்துறை உங்கள் நண்பன்
காவல்துறை உங்கள் நண்பன் என்ற கூற்றுக்கு ஏற்ப காவல்துறையினர் அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட தரவுகளை சரி பார்த்து விட்டு அவருக்கு உதவ முடிவு செய்தனர். நாகா பகுதியில் இருக்கும் ராஜ்தானி ஹோட்டலில் அவரை தங்க வைத்தனர்.
200 பேர் குவிந்தனர்
அதன் பின்னும் பிரச்சனை ஓயவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து எட்டு அடி மனிதர் வந்துள்ளார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவ சுமார் 200க்கும் மேற்பட்ட லக்னோ மக்கள் அந்த ஹோட்டல் முன்பு கூடி விட்டனர்.
விரக்தியில் ஷேர் கான்
இதை எதிர்பார்க்காத ஷேர் கான் மனதளவில் சோர்ந்து போய் விரக்தி அடைந்தார். பின்னர் அவர் வெளியே செல்லும் போது காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
போட்டியில் என்ன நடந்தது?
முதல் ஒருநாள் போட்டியை காணச் சென்ற ஷேர் கான், அங்கேயும் முக்கிய நபராகவே இருந்தார். இந்தியா பங்கேற்காத போட்டி என்பதால் இந்த ஒருநாள் போட்டிக்கு கூட்டம் குறைவாகவே இருந்தது. அதனால், ஷேர் கான் அவரது உயரத்தால் அங்கிருந்த எல்லோரையும் கவர்ந்தார்.
இந்தியா வந்த அனுபவம்
ஆப்கானிஸ்தான் ஒருவருக்கு இந்தியா வந்த அனுபவம் மோசமாக அமைந்து விட்டது. நல்ல வேளையாக காவல்துறை அவருக்கு உதவி செய்து இந்தியாவின் நற்பெயரை காப்பாற்றி உள்ளது.