முதல் ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் தொடர் துவங்கிய முதல் இரு ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இரண்டுமே கோப்பை வெல்லவில்லை. இந்த நிலையில், 2010இல் இரண்டு அணிகளும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதின.
சச்சினின் மும்பை இந்தியன்ஸ்
அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் தான் கேப்டன். சச்சின் தலைமையில் மும்பை அணி ஐபிஎல் கோப்பை வெல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. மறுபுறம் தோனி ரசிகர்கள் சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா? என காத்திருந்தனர்.
சிஎஸ்கே ரன் குவிப்பு
அந்த இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் ஆடியது. முரளி விஜய் 26, சுரேஷ் ரெய்னா 57, தோனி 22 ரன்கள் எடுத்தனர். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடியது.
தோனி போட்ட திட்டம்
அப்போது தோனி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த சுழற் பந்துவீச்சை கட்டவிழ்த்து விட்டார். முதல் ஓவரை அஸ்வின் வீசத் துவங்கினார். தொடர்ந்து முத்தையா முரளிதரன், ஷதாப் ஜகாதி பந்து வீசினர். தவான், சச்சின், அபிஷேக் நாயர் துவக்கத்தில் நிதானமாக ஆடத் துவங்கினர்.
ரன் கொடுத்த ஷதாப் ஜகாதி
தன் முதல் இரண்டு ஓவர்களில் இடது கை வேகப் பந்துவீச்சாளரான ஷதாப் ஜகாதி 21 ரன்கள் கொடுத்தார். அப்போது தன் மும்பை அணி வேகம் எடுக்கத் துவங்கி இருந்தது. அபிஷேக் நாயர் அந்த ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்தார். சச்சின் களத்தில் இருந்தார்.
திட்டத்தை தொடர்ந்த தோனி
எனினும், இடது கை பந்துவீச்சாளரை வைத்து வலது கை பேட்ஸ்மேன்களான சச்சின், அபிஷேக் நாயர் மற்றும் அம்பதி ராயுடுவை சமாளிக்கலாம் என்ற தன் திட்டத்தை அப்படியே தொடர்ந்தார் தோனி. ஜகாதிக்கு மீண்டும் ஒரு ஓவர் கொடுத்தார்.
சிஎஸ்கே வெற்றி
ஜகாதி வீசிய போட்டியின் 15வது ஓவரில் சச்சின், சௌரப் திவாரி என இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது. பொல்லார்டு அதிரடி காட்டினாலும், அந்த அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
உள்ளுணர்வு
இந்த இறுதிப் போட்டி பற்றி பேசிய ஷதாப் ஜகாதி, தோனி தன் உள்ளுணர்வை முழுமையாக நம்பினார். போட்டியின் குறிப்பட்ட நேரத்தில் தன் அதிரடி முடிவை அவர் தொடர்ந்தார் என்றார். அப்போது தான் தோனி இந்திய அணி கேப்டனாகவும் ஜொலிக்கத் துவங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
நாங்க தான் முதலில்..
மேலும், தோனி எப்போதும் பந்துவீச்சாளர்களின் கேப்டன் என குறிப்பிட்ட ஷதாப் ஜகாதி, பந்துவீச்சாளர்களை தோனி பீல்டிங் நிறுத்த அனுமதிப்பார் எனவும், அது வேலை செய்யாத போது அவரே பீல்டிங் நிறுத்துவார் எனவும் கூறினார். ஆனால், எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு தான் முன்னுரிமை என்றார்.