கூல் கேப்டன் டோணி
இந்திய அணியன் முன்னாள் கேப்டன் டோணி அனைவராலும் 'கேப்டன் கூல்' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். கடைசி ஓவரில் 20 ரன் அடிக்க வேண்டும் என்றாலும் முகத்தை சாந்தமாகதான் வைத்து இருப்பார். லீக் மேட்ச் என்றாலும் சரி இறுதி போட்டி என்றாலும் சரி எப்போதும் போல இயல்பாக இருப்பார். அவர் தன்னுடைய உணர்ச்சிகளை கேமாரவுக்கு முன்பு ஒரு முறை கூட வெளிப்படுத்தியதே இல்லை. இதன் காரணமாகவே இந்திய கேப்டன்களுக்கு இல்லாத 'கேப்டன் கூல்' செல்லப் பெயர் டோணிக்கு வழங்கப்பட்டது.
டோணி குறித்து ரெய்னா
இந்த நிலையில் டோணி குறித்து சில முக்கியமான தகவல்களை ரெய்னா பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்திய அணியில் இணைவதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் ரெய்னா. இந்த நிலையில் மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் ரெய்னா விளையாடுவது சந்தேகம் ஆகி இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் குறித்த கேள்வியின் போது டோணி அணியை எப்படி வழிநடத்தினார் என்று ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் பொய் பாஸ்
டோணி உண்மையாகவே கேப்டன் கூல் தானா என்ற கேள்விக்கு ரெய்னா பதில் அளித்தார். அதில் ''டோணி எப்போதும் கேமராவுக்கு முன் எதையும் காட்டிக் கொள்ள மாட்டார். அவர் கண்களில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் டிவியில் இடைவேளை போடும் சமயங்களில் எங்களை நன்றாகவே திட்டுவார். அவருக்கு கோபம் எல்லாம் வரும். ஆனால் அவருக்கு அதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது. ரசிகர்களால் எப்போதும் அவர் கோபப்படுவதை பார்க்கவே முடியாது'' என்று கூறினார்.
முதல் நாள் திட்டம்
மேலும் டோணியின் வித்தியாசமான பழக்கம் ஒன்றை குறித்தும் ரெய்னா பேசினார். அதில் ''அவர் எப்போதும் ஒரு போட்டிக்கு போகும் முன் மூன்று வித்தியாசமான திட்டங்களை தீட்டுவார். ஒரு திட்டம் தோற்கும் போது அடுத்த திட்டத்திற்கு செல்வார். கிரிக்கெட் போட்டிகளுக்கு முதல்நாள் இரவு மிகவும் டென்ஷனாக இருப்பார். ஆனால் போட்டியின் போது அந்த டென்ஷன் இருக்காது. அவர் வித்தியாசமான மனிதர்'' என்று கூறினார்.