உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்
ஆஸ்திரேலியாவின் இயான் ஹீலி மற்றும் அவருக்கு பின் வந்த ஆடம் கில்கிறிஸ்ட் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களாக வலம் வந்தனர். கில்கிறிஸ்ட் ஆதிக்கம் செலுத்திய அதே காலகட்டத்தில் இலங்கையின் குமார் சங்ககாராவும், தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சரும் விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்கினர்.
விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தேவை
இந்த காலகட்டத்தில் இந்தியாவில் விக்கெட் கீப்பர் சிறப்பாக அமைந்தாலும், அவர்கள் பேட்டிங்கில் பெரிதாக சாதிக்கவில்லை. ஒரு நல்ல விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தேவை என்ற நிலையில், உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக ஆடி வந்த தோனியை அடையாளம் கண்டது இந்திய கிரிக்கெட் அணி.
கீப்பிங்கில் சுமார்
அப்போது தேசிய தேர்வுக் குழு தலைவராக விளங்கிய கிரண் மோரே, தோனியை இந்திய அணியில் தேர்வு செய்தார். அப்போது தோனி பேட்டிங்கில் அதிரடி காட்டினாலும், விக்கெட் கீப்பிங்கில் சுமாராகவே செயல்பட்டு வந்தார்.
விமர்சனம்
அப்போது பல முன்னாள் வீரர்கள் தோனி விக்கெட் கீப்பிங்கிற்கு சரி வர மாட்டார், அவருக்கு விக்கெட் கீப்பிங் தெரியவில்லை என கடுமையாக விமர்சனம் செய்தனர். எனினும், கேப்டன் கங்குலி, தோனிக்கு அதிக வாய்ப்பு அளிக்க முடிவு செய்தார். அதை பயன்படுத்திக் கொண்ட தோனி, விக்கெட் கீப்பிங்கில் தனித்துவம் மிக்கவராக மாறி விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
தோனி பற்றி கிரண் மோரே
இது பற்றி, முன்னாள் வீரரும், அப்போதைய தேர்வுக் குழு தலைவருமான கிரண் மோரே பேசினார். அப்போது தோனியை ஏன் தேர்வு செய்தார்கள், அப்போது என்ன விமர்சனம் எழுந்தது, அதை எப்படி தோனி மாற்றினார் என கூறினார் கிரண் மோரே.
பிரச்சனைகள்
"நாங்கள் அவரின் திறமையை கண்டோம். ஆனால், அவரின் கடுமையான உழைப்பு மற்றும் முன்னேற்றம் தான் அவரை இந்த நிலைக்கு எடுத்து வந்துள்ளது. அவர் துவங்கிய போது அவரிடம் சில பிரச்சனைகள் இருந்தன." என்றார் கிரண் மோரே.
கேள்விகள்
மேலும், "அவரது விக்கெட் கீப்பிங் திறமை மீது கேள்விகள் எழுந்தன. எனினும், அவர் தொடர்ந்து உழைத்து, ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார்" என தோனி விமர்சனங்களை மாற்றிக் காட்டியதை குறிப்பிட்டார் கிரண் மோரே.
அடுத்தவர் என்ன சிந்திக்கிறார்…
மேலும், தோனி வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார் என குறிப்பிட்டு அது பற்றி கூறினார். "அவர் எப்போதும் போட்டியில் ஒரு படி முன்னே நின்றார். அது அவரை சிறந்த வீரராக வைத்திருந்தது. வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நிற்பது, சுழற் பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து வேலை செய்வது என அவர் அடுத்தவர் என்ன சிந்திக்கிறார் என தெரிந்து வைத்திருந்தார்" என்றார் கிரண் மோரே.
வாய்ப்பை உருவாக்கினார்
"அவர் ஒன்றுமே இல்லாத இடத்தில் வாய்ப்புகளை உருவாக்கினார். போட்டியில் எதுவுமே நடக்கவில்லை என்றால், அவர் ஒரு ரன் அவுட் வாய்ப்பையோ, ஸ்டம்ப்பிங் வாய்ப்பையோ உருவாக்கினார்" என தோனி பற்றி புகழாரம் சூட்டினார் கிரண் மோரே.