வித்தியாசம்
சிஎஸ்கே அணியின் தேர்விற்கு பின் தோனி மிக முக்கியமான பங்கு வகித்தார் என்று ஏற்கனவே கூறப்பட்டது. ராயுடுவை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும் என்று அவர் அணி நிர்வாகத்திடம் கேட்டு இருந்தார். இந்த வீரர்கள்தான் வேண்டும், இந்த இடத்திற்கு இவர்கள்தான் சரியாக இருப்பார்கள் என்று ஒவ்வொரு வீரராக பார்த்து அணியில் தேர்வு செய்தார். சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூட, அணி தேர்வில் தோனி நிறைய அறிவுரை வழங்கினார் என்று பேட்டியளித்திருந்தார்.
அணியை மாற்றினார்
சென்னை அணி மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் திணறிய பின், தோனி அணியின் விளையாட்டு முறையை மாற்றினார். கொஞ்சம் கொஞ்சமாக, வீரர்களின் இடங்களை மாற்றி சென்னை அணியை ஒரு நிலைக்கு கொண்டு வந்தார். முக்கியமாக அம்பதி ராயுடுவை, ஓப்பனிங், இரண்டாவது இடம், மூன்றாவது இடம், 4 வது இடம் என எல்லா ஆர்டர்களிலும் இறங்க வைத்து, பயிற்சி கொடுத்தார். பவுலிங் ஆர்டரையும் சரியாக நிலைக்கு மாற்றினார்.
அவ்வப்போது கோபம்
எப்போதும் கோபம் கொள்ளாத தோனி இந்த ஐபிஎல் தொடரில் சில இடங்களில் கோபப்பட்டார். பல முறை டெத் ஓவர்களில் சரியாக பந்து வீசாத வீரர்களை கடிந்து கொண்டார். ஒவ்வொரு வீரருக்கும் ஏற்படும் பிரச்சனைகளை, முன்னின்று கவனித்துக் கொண்டு அணியை வழிநடத்தினார். அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய பின்பும் கூட புதிய வீரர்களை கொண்டு வந்து அணியை நிலைப்படுத்தினார்.
பார்மிற்கு கொண்டு வந்தார்
ஐபிஎல் தொடரில் எப்போதும் இருக்கும் தோனி மேஜிக் இதிலும் இருந்தது. தோனிக்கு கீழ் விளையாடினால் கண்டிப்பாக வீரர்கள் பார்மிற்கு திரும்புவார்கள் என்பார்கள். நெஹ்ரா தொடங்கி இப்போது ராயுடு, ரெய்னா வரை இதுதான் நடந்தது. பார்ம் அவுட் வீரர்கள் எல்லோரையும் அணியில் எடுத்துவிட்டு எல்லோருக்கும் சரியாக பயிற்சி அளித்து, மன நிலையை மாற்றி அவர்களை பார்மிற்கு கொண்டு வந்தார். இதில் தோனி பார்மிற்கு திரும்பியதும் அடக்கம்.
இரண்டு வருட பசி
தோனியின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு பின் மிக முக்கியமான காரணம் இருக்கிறது. இரண்டு வருடம் சென்னை அணி இல்லாமல், அவர் மிகவும் கஷ்டப்பட்டதாக பேட்டியளித்து இருந்தார். அந்த இரண்டு வருட பசியை கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாற்றி, ஒவ்வொரு போட்டியாக முன்னேறி சென்று கடைசியில் ஹைதராபாத்தை வீழ்த்திய அந்த தோனி கோப்பையை தூக்காமல் ஷிவாவை தூக்கி கொஞ்சிக் கொண்டு இருந்தார்.. வெற்றியை அவர் இப்படித்தான் கொண்டாடுவார்.