போட்டியின்றி தேர்வு
பிசிசிஐ புதிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 14-ஆம் தேதி இறுதி நாள் என தேர்தல் அதிகாரி என்.கோபாலஸ்வாமி அறிவித்தார். இந்நிலையில் கங்குலி மட்டுமே தலைவர் பதவிக்கு மனு செய்தார். இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பின்னணி என்ன?
கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சுமார் 100 பிசிசிஐ உறுப்பினர்களை அழைத்து விருந்து கொடுத்தார். தன் ஆதரவு வேட்பாளர் பிரிஜேஷ் படேலுக்கு வாக்குகளை சேகரிக்க தடபுடலாக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அன்று இரவு சுமார் 9:30 மணி வரை சீனிவாசனுக்கும் படேலுக்கும் எல்லாம் சரியாக நடந்து கொண்டு இருந்தது.
ஆனால் என்ன?
ஆனால் சில உறுப்பினர்களோ, கடந்த சில ஆண்டுகளாக பிசிசிஐ தலைவராக நீடித்த என்.சீனிவாசனின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. அதனால் நிர்வாகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
என்ன மோசம்
அதேபோல் ஐபிஎல் ஊழல், கிரிக்கெட்டில் சிலர் தடை செய்யப்பட்டது. சென்னை ஆதிக்கம், இதெல்லாம் சரியில்லை என்று கூறி இருக்கிறார்கள். அதனால் என்.சீனிவாசனையோ அல்லது அவரது பினாமியையோ மீண்டும் தலைவர் பதவிக்கு கொண்டு வர முடியாது என்று கூறியுள்ளனர்.
எப்படி கங்குலி?
பின்னர் தான் அனுராக் தாக்கூர், சவுரவ் கங்குலியின் பெயரை பரிந்துரைத்துள்ளார். ஏனெனில் இவருக்கு கிரிக்கெட் அனுபவமும், வடகிழக்கு மற்றும் மேற்கத்திய மாநிலங்களின் பெரும் ஆதரவு இருப்பதால் பரிந்துரைகிறேன் என்று காரணத்தையும் தெரிவித்துள்ளார். இருப்பினும். இந்த விஷயம் மட்டுமே இந்த முடிவின் தூண்டுதலாக அமையவில்லை என்று சொல்லப்படுகிறது.
வேறு காரணம்
ஆம் இதற்கு பின் வேறு ஒரு காரணமும் இருக்கிறதாம். இரண்டு நாட்களுக்கு முன்னரே கங்குலி ஒரு மத்திய அமைச்சரை சந்தித்து பிசிசிஐ நிலைமை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. அந்த அமைச்சரும் கங்குலிக்கு ஆதரவாக பேசி உள்ளார். இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகத்தான் கங்குலியின் பெயரை அனுராக் தாக்கூர் முன்மொழிந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
10 மாதங்கள் மட்டுமே பதவி
கங்குலி பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 10 மாதங்கள் மட்டுமே அந்தப் பொறுப்பில் செயல்பட முடியும். பிசிசிஐ -யின் புதிய விதிகளின்படி ஒருவர் கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்பில் தொடர்ச்சியாக 6 வருடங்கள் மட்டுமே செயல்பட முடியும்.
ஏன் இப்படி
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்புகளில் செயல்பட்டுவருவதால், பிசிசிஐ தலைவராக அவர் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே செயல்பட முடியும். தற்போது, கங்குலி மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
பிசிசிஐயின் புதிய குழு
இந்நிலையில், பிசிசிஐயின் புதிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜே ஷா புதிய செயலாளராகவும், பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் புதிய பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்.