டெஸ்ட் தொடர்
2008ஆம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அப்போது அனில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. அந்த தொடரில் தான் கௌதம் கம்பீர் தன் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஷேன் வாட்சன் மீது இடித்தார்
இரட்டை சதம் அடித்தும் அசத்தினார். சிறப்பாக ஆடி வந்த நிலையில் போட்டியின் இடையே ஒரு கட்டத்தில் ஷேன் வாட்சன் மீது தன் கை முட்டியை வைத்து இடித்தார். அது ஓடி வரும் போது தெரியாமல் நடந்ததா? அல்லது வேண்டும் என்றே செய்தாரா? என்ற விவாதம் எழுந்தது.
வேண்டும் என்றே செய்யவில்லை
கௌதம் கம்பீர் அந்த தொடரில் பல முறை கோபமாக நடந்து கொண்ட நிலையில், இதை அவர் வேண்டும் என்றே செய்ததாக கருதப்பட்டது. கம்பீர் இது பற்றி கூறுகையில் பலர் தான் வேண்டும் என்றே செய்ததாக கூறுகிறார்கள். ஆனால், நான் அப்படி செய்யவில்லை என்றார்.
விசாரணை
போட்டி முடிவில் மேட்ச் ரெப்ரீ அவரை விசாரணை செய்ய அழைத்தார். அப்போது பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் அவருடன் சென்றார். அந்தப் போட்டிக்கான மேட்ச் ரெப்ரீ கிறிஸ் பிராடு. அவரிடம் என்ன சொல்வது என கேரி கிர்ஸ்டன், கம்பீரிடம் பேசினார்.
இரக்கம் காட்டுவார்
குற்றத்தை ஒப்புக் கொண்டால் கிறிஸ் பிராடு இரக்கம் காட்டி விட்டுவிடுவார். தடை விதிக்க மாட்டார் என கூறி உள்ளார் கேரி கிர்ஸ்டன். அதை ஏற்று கம்பீர், மேட்ச் ரெப்ரீ தவறை ஒப்புக் கொள்கிறீர்களா என கேட்ட போது ஆம் என கூறி உள்ளார்.
தடை
உடனடியாக மேட்ச் ரெப்ரீ அவரை தடை செய்வதாக கூறினார். அந்த தொடரில் ஒரு போட்டியில் ஆடாத நிலையிலும் கம்பீர் அதிக ரன் குவித்த வீரராக திகழ்ந்தார். ஒருவேளை அந்த போட்டியிலும் ஆடி இருந்தால் அவர் புதிய சாதனை படைத்திருக்கக் கூடும்.
மோதல் சம்பவங்கள்
இந்த சம்பவத்தை இப்போது கௌதம் கம்பீர் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். எப்போதும் எதிரணி வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் கம்பீர், இந்திய வீரர்களிடம் மோதியதில்லை எனவும் இந்தப் பேட்டியில் கூறினார். தான் விவாதம் செய்த அனைத்து சம்பவங்களையும் இந்த உலகம் பார்த்துள்ளது என்றார்.