ஐபிஎல் பயிற்சி
தோனி கடந்த ஓராண்டாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடவில்லை. நீண்ட நாட்களாக இந்திய அணியை விட்டு விலகி இருந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்யத் துவங்கி இருந்தார்.
ஓய்வில் தோனி
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. அதை அடுத்து தோனி லாக்டவுன் காலத்தை தன் ராஞ்சி பண்ணை வீட்டில் கழித்து வந்தார். அங்கே புல்லட் ஓட்டுவது, மகளுடன் விளையாடுவது, விவசாயம் செய்வது என தன் பொழுதை போக்கி வந்தார்.
தோனி பிறந்தநாள்
இதன் இடையே ஜூலை 7 அன்று தன் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். அவரைக் காண அன்று இரண்டு இந்திய அணி வீரர்கள் மட்டுமே வந்தனர். அவர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா. சகோதரர்களான அவர்கள் குஜராத்தின் வதோதரா நகரில் இருந்து ராஞ்சி வந்தனர்.
எப்படி சென்றனர்?
தோனியை நேரில் கண்டு பிறந்த நாளுக்கு வாழ்த்தி விட்டு சென்றனர். ஆனால், அவர்கள் எப்படி லாக்டவுனுக்கு நடுவே ராஞ்சி சென்றனர்? என்ற கேள்வி எழுந்தது. விமான சேவைகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டாலும் இந்திய வீரர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முடியாது.
அதிர வைக்கும் தகவல்கள்
அப்புறம் எப்படி பாண்டியா சகோதரர்கள் தோனியை காண பயணம் செய்தனர்? அது பற்றிய சில அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாண்டியா சகோதரர்கள் தனி விமானம் மூலம் வதோதராவில் இருந்து ராஞ்சிக்கு சென்றுள்ளனர்.
ஹர்திக் மனைவி வரவில்லை
அந்த தனி விமானத்தில் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் அவரது மனைவி பான்குரி ஆகியோர் பயணித்துள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் கர்ப்பமாக இருப்பதால் அவர் பயணம் செய்யவில்லை எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
தோனியின் பண்ணை வீடு
மேலும், செவ்வாய் அன்று மாலை ராஞ்சி விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். அங்கே இருந்து தோனியின் பண்ணை வீடு பத்து கிலோமீட்டரில் உள்ளது. அந்த இடத்திற்கு தோனி ஏற்பாடு செய்து இருந்த காரில் பயணித்தனர். இடையே யாரையும் அவர்கள் மூவரும் சந்திக்கவில்லை.
ராஞ்சி விதி
அவர்கள் மூவரும் அன்று மாலை தோனியை சந்தித்து வாழ்த்து கூறினர். ராஞ்சியில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அடுத்த 72 மணி நேரத்தில் திரும்பி விட வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால், அவர்கள் அதற்குள் கிளம்பினர்.
நிறைய செலவு
ராஞ்சியில் அமலில் உள்ள சமூக இடைவெளி விதிமுறைகளை பாண்டியா சகோதரர்கள் முழுமையாக கடை பிடித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. தோனியைக் காண இத்தனை சிக்கல்களுக்கு நடுவே, நிறைய செலவு செய்து வியக்க வைத்துள்ளனர் ஹர்திக் பாண்டியா.