ஏன் இந்த சொதப்பல்?
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதில் தொடக்கம் முதலேயே பெங்களூரு தொடக்க பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, படிக்கல் அடித்து ஆட தொடங்கினர். சென்னை பவுலர்களின் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தன. குறிப்பாக, தாகூர் ஓவரில் கோலி அடித்த அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் பறந்தது. அந்த அணி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில், சென்னை அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் ஒரு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான். 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த கோலி, பிராவோ ஓவரில் கேட்ச்சானர். பிறகு, டி வில்லியர்ஸ் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் ஓவரில் கேட்ச்சானர். அதே ஓவரில் படிக்கல் 50 ரன்களில் 70 ரன்கள் எடுத்து கேட்ச்சானார். பிறகு மேக்ஸ்வெல்லும் 11 ரன்களில் அவுட்டானார்.
தடுமாறிய ஹிட்டர்ஸ்
10 ஓவர்களில் 90 ரன்கள் குவித்த பெங்களூரு, அடுத்த 7 ஓவர்களில் ஜஸ்ட் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி பத்து ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தது. முதல் 10 ஓவரில் பாகுபலியாய் மிரட்டிய ஆர்சிபி, கடைசி 10 ஓவரில் "பாகு" இன்றி பலி ஆனது. சென்னை வெற்றிப் பெற மிக முக்கிய காரணம், கடைசி 10 ஓவர்களில் பெங்களூரு சொதப்பியதனால் மட்டுமே. தோல்விக்கு வேறு எந்தவித காரணமும் கண்டுபிடிக்க தேவையில்லை. இங்கு நாம் பாராட்ட வேண்டியது தோனியின் தேர்ந்த கேப்டன்சி மற்றும் சிஎஸ்கே பவுலர்களின் புத்திசாலித்தனமான ஒருங்கிணைந்த பவுலிங்கை தான். முதல் 10 ஓவர்களில் ரன்கள் கட்டுக்கடங்காமல் சென்றதால், கடைசி 10 ஓவர்களில் நிறுத்தி நிதானமாக, சரியான இடங்களில் ஃபீல்டர்களை நிறுத்தி அதற்கேற்ப சரியான திசையில் பந்துகளையும் வீசினார். தோனியின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தாலும், அவர் ஃபீல்டிங் நிறுத்திய இடத்துக்கு ஏற்ப, பவுலர்கள் பந்து வீசியது தான் இங்கு நாம் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
ஒரே உருப்படியான விஷயம்
பெங்களூரு அணியால் இந்த கிடுக்குப்பிடியில் இருந்து கடைசிவரை மீண்டு வரவே முடியவில்லை. டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என்று ஹிட்டர்கள் இருந்தும் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஷார்ஜா ஸ்லோ பிட்ச் என்பதால், இறுதிக்கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க ரொம்பவே திணறினார்கள். இதனால், பெங்களூர் அணியால் 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டியுள்ளது. ஆர்சிபி அணி நிர்வாகம் டி வில்லியர்ஸை ரொம்பவே சார்ந்து இருப்பதாக தெரிகிறது. ஒன்று கோலி அடிக்க வேண்டும், இல்லையெனில், டி வில்லியர்ஸ் அடிக்க வேண்டும், இல்லையெனில் மேக்ஸ்வெல் அடிக்க வேண்டும். இவர்களைத் தவிர அந்த அணியின் பேட்டிங் ஸ்ட்ரென்த் என்று யாரையும் குறிப்பிட முடியவில்லை. கடந்த 3 ஆண்டுகளில், அந்த அணி செய்த ஒரே உருப்படியான விஷயம் என்னவெனில், தேவ்தத் படிக்கல் எனும் திறமையான இளைஞரை கண்டுபிடித்தது தான். ஆனால்,இன்னும் எத்தனை வருடங்களுக்கு டி வில்லியர்ஸை நம்பி ஆர்சிபி நிர்வாகமோ இருக்கப் போகிறதோ தெரியவில்லை.
ஒண்ணுமே பண்ண முடியல
இதன் பிறகு களமிறங்கிய சென்னை அணியில், கெய்க்வாட் 38 ரன்களும், டு பிளசிஸ் 31 ரன்களும் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பிறகு மொயீன் அலி 23 ரன்களும், அம்பதி ராயுடு 32 ரன்களும் எடுக்க, சென்னை அணியின் ரன் ஸ்கோர் எந்தவித தொய்வும் இன்றி வேகமாக முன்னேறியது. இறுதியில் சுரேஷ் ரெய்னா 20 ரன்களும், தோனி 7 ரன்களும் எடுத்து களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ், 18.1வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. அவ்ளோ தான். ஸோ சிம்பிள். முதல் 10 ஓவர்களில் ஆளுமை செலுத்தி போட்டியை கையில் வைத்திருந்த ஆர்சிபி, அடுத்த 30 ஓவர்களில் ஒன்றுமே பண்ண முடியாமல், கையில் கிடைத்த அருமையான வெற்றி வாய்ப்பை தாரை வார்த்துள்ளது.