மும்பை: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் கடந்த செப்.8ம் தேதி வெளியானது. இதில் 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் இந்திய டி20 அணியில் அஷ்வின் இடம் பிடித்திருந்தது பலரையும் ஆச்சர்யம் கொள்ள வைத்தது.
டி20 உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் தொடங்குகிறது. வரும் அக்டோபர் 24ம் தேதி, இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதில், இந்திய அணி வீரர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்பின்னர் அஷ்வினுக்கும் இடம் கிடைத்தது. 2017ம் ஆண்டுக்கு பிறகு குறுகிய ஓவர் கிரிக்கெட்டில்.. அதாவது இந்திய அணியின் ப்ளூ ஜெர்சியை அஷ்வின் அணியவே இல்லை.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 14ம் தேதி இத்தொடர் முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்நிலையில், கடந்த செப்.8ம் தேதி வெளியான இந்திய அணியில் ரோஹித் சர்மா(wc) , விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அவாய்ட் செய்யப்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ரசிகர்களுக்கு சற்று கூடுதல் இன்ப அதிர்ச்சியாக, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்தது.
இந்த வீரர்கள் பட்டியலில் அஷ்வின் இடம்பெற்றது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா கூறுகையில், "ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அஷ்வின் விளையாடி வருகிறார். அவர் சிறப்பாகவும் பந்து வீசுகிறார். டி20 உலகக் கோப்பையில் எங்களுக்கு ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டார். ஐபிஎல்லின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கு விக்கெட்டுகள் மெதுவாகவும் இருக்கலாம். ஸ்பின்னர்களுக்கு அந்த விக்கெட் உதவும். எனவே அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை. வாஷிங்டன் சுந்தர் காயமடைந்த வீரர்களின் பட்டியலில் இருக்கிறார். அஷ்வினுக்கு அவரது செயல்திறன் காரணமாக தான் அணியில் இடம் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
இதன் பிறகு, அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு அஷ்வின் தனது ட்விட்டரில், "ஒவ்வொரு சுரங்கப் பாதையின் இறுதியும் வெளிச்சத்தை கொண்டிருக்கும். ஆனால், அந்த சுரங்கத்தில் இருப்பவர்கள், அந்த வெளிச்சத்தை ஒருநாள் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவே வாழ்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம் ஒருநாள் வரும். அதை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் ஒருநாள் அதனை அனுபவிப்பார்கள்" என்று ட்வீட் ஒன்று பதிவிட அது வைரலானது.
இந்நிலையில், அஷ்வின் மீண்டும் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளார். ஆம்! அஷ்வின் குறித்து இந்திய அணி மீட்டிங்கில் முதன் முதலில் பேச்சு எடுத்ததே ரோஹித் தான். டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவலின் படி, அஷ்வின் அணியில் சேர்க்கப்பட்டதற்கு முக்கிய பங்காற்றியது ரோஹித் ஷர்மா தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணித் தேர்வு குறித்து மீட்டிங்கில் கலந்து கொண்ட ரோஹித் ஷர்மா, ஐபிஎல் போட்டிகளில் அஷ்வின் ஓவரை அடிப்பது எவ்வளவு சிரமமாக இருந்தது என்பது குறித்து விளக்கியுள்ளார். ரோஹித்தின் இந்த கருத்தை கேப்டன் விராட் கோலியும் ஆமோதிக்க, அதன் பிறகே அஷ்வின் அணிக்குள் வந்திருக்கிறார்.