அடுத்த கேப்டன் யார்?
சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது முறையாக 1998இல் கேப்டன் பதவியில் நியமிக்கப்பட்டார். ஆனால், தோல்விகளாலும், அவரால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதாலும் கேப்டன் பதவியில் இருந்து தாமாகவே விலகினார். அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது?
எதிர்ப்பு
அப்போது அணியின் துணை கேப்டனாக இருந்தார் கங்குலி. அவரை கேப்டன் ஆக்க தேர்வுக் குழு முயன்றது. ஆனால், அப்போது பிசிசிஐயில் சிலர் எதிர்ப்பு கூறி உள்ளனர். அனில் கும்ப்ளே, அஜய் ஜடேஜா போன்றோரின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.
முக்கிய காரணம்
ஆனால், கங்குலிதான் துணை கேப்டன் எனக் கூறி தேர்வுக் குழு அவரை கேப்டனாக நியமித்தது. ஆக, துணை கேப்டன் என்ற அடையாளம் தான் கங்குலி கேப்டன் பதவியை பிடிக்க முக்கிய காரணம். ஆனால், இதில் முக்கிய விஷயமே அவர் எப்படி துணை கேப்டன் பதவியில் நியமிக்கப்பட்டார் என்பதே.
துணை கேப்டன்
அது பற்றி அசோக் மல்ஹோத்ரா கூறுகையில், கல்கத்தாவில் நடந்த தேர்வுக் குழு கூட்டத்தில் சச்சினை கேப்டனாக தேர்வு செய்து விட்டு, துணை கேப்டனாக யாரை நியமிக்கலாம் என விவாதம் நடந்துள்ளது. அப்போது அணியின் பயிற்சியாளரும் உடன் இருந்துள்ளார்.
புகார்
அப்போது கங்குலியை துணை கேப்டன் ஆக்குவது பற்றி அணியின் பயிற்சியாளரிடம் கேட்ட போது கங்குலி நிறைய கோக் அருந்துகிறார், இரண்டு ரன் ஓட வேண்டிய இடத்தில் ஒரு ரன் தான் ஓடுகிறார் என வரிசையாக புகார் பட்டியல் வாசித்து இருக்கிறார்.
ஓட்டு
கங்குலியை துணை கேப்டனாக தேர்வு செய்வது குறித்து ஐந்து தேர்வுக் குழு உறுப்பினர்களும் ஓட்டு போட முடிவு செய்தனர். மூவர் கங்குலிக்கு ஆதரவாகவும், இருவர் அதற்கு மாற்றாகவும் ஓட்டு போட்டனர். இந்த நிலையில், மற்றொரு சம்பவம் நடந்தது.
பிசிசிஐ தலைவர் குறுக்கீடு
அதுவரை பிசிசிஐ வரலாற்றிலேயே இல்லாத அளவு பிசிசிஐ தலைவர் அங்கே நுழைந்துள்ளார். அவர் கங்குலியை துணை கேப்டன் ஆக்குவதை மறு பரிசீலனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார். அதை அடுத்து ஒரு உறுப்பினர் மட்டும் கங்குலிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளார்.
பிடிவாதம்
எனினும், அசோக் மல்ஹோத்ரா பிடிவாதமாக இருந்து கங்குலியை துணை கேப்டன் ஆக்கி இருக்கிறார். அந்த துணை கேப்டன் பதவியால் தான் பின்னர் கங்குலி கேப்டன் ஆனார். அவர் கேப்டனான உடன் அவரது சிறப்பான செயல்பாடுகள் அவர் மீது முன்பு இருந்த விமர்சனங்களை மறக்கச் செய்தது.
தலைமை
இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்த கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராகவும் இருப்பது தான் வியப்பு. இது கங்குலியின் தலைமைப் பண்புக்கு கிடைத்த வெற்றி என்று தான் கூற வேண்டும். கங்குலி அடுத்து ஐசிசி தலைவராகும் தகுதி கூட உள்ளது என சிலர் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.