ஆலோசகராக தோனி
விராட் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. மேலும் 3 ரிசர்வ் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர். இதற்கெல்லாம் மேலாக தோனியை ஆலோசகராக நியமித்து பெரும் ட்விஸ்ட் கொடுத்தது பிசிசிஐ.
தோனி எதற்கு வேண்டும்
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருக்கும் போது அந்த இடத்தில் தோனியின் தேவை என்ன என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பந்துவீச்சு திட்டம் என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எந்த விதமான பவுலர்களை, எந்த சமயத்தில் களமிறக்க வேண்டும் என்பதை களத்திலேயே சரியாக கணித்து செயல்படுத்தக்கூடியவர் தோனி. எனவே பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கிற்கு கோலி மற்றும் ரவி சாஸ்திரிக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே தோனி களமிறக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
சுழற்பந்துவீச்சாளர்கள்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே அமீரகத்தில் சுழற்பந்துவீச்சு நன்கு எடுபடும் எனத் தெரிகிறது. சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து போட்டியை வெல்வது என்பது தோனிக்கு மிகவும் சுலபமான ஒன்றாகும். எனவே அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோலியின் கேப்டன்சி
தற்போதைய கேப்டன் விராட் கோலி தலைமையில் டெஸ்ட் அணி சிறப்பாக விளையாடி வந்தாலும், முக்கியமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சொதப்பிவிடுகிறது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோலியின் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. இதே போல கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவி வெளியேறியது.
ரசிகர்கள் அதிருப்தி
உள்நாட்டு தொடரான ஐபிஎல் போட்டிகளிலும் தோனியின் கேப்டன்சி எடுபடவில்லை. நீண்ட வருடங்களாக விராட் கோலியின் கேப்டன்சியில் செயல்பட்டு வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தோனியின் கேப்டன்சி
தோனியின் தலைமையில் இதுவரை இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. தோனி முதல் முறையாக பொறுப்பேற்ற 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இதன் பின்னர் 2011ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி என 3 கோப்பைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
சிஎஸ்கே
முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்னும் கிரிக்கெட்டுடன் நெருங்கியே தான் உள்ளார். ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 3 முறை கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. இந்த முறையும் வலுவான நிலையில் உள்ளது. எனவே 4வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் எனக்கூறப்படுகிறது. இவையெல்லாம் டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலிக்கு பயன்படவுள்ளது.