சிட்னி: இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடக்க வேண்டும், அதை பிலிப் ஹியூக்ஸ் மரணத்திற்காக ஒத்தி வைக்க கூடாது என்று அந்த வீரரின் குடும்பத்தார் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுவதற்காக இந்திய அணி அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. முதல் டெஸ்ட் டிசம்பர் 4ம்தேதி தொடங்குகிறது. இதனிடையே உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் பந்து தலையில் தாக்கி நேற்று உயிரிழந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் மீளாததால் இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஆலன் பார்டர் உள்ளிட்ட முன்னாள் வீரர்களால் எழுப்பப்பட்டது.
இதனிடையே தெற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க செயல் அதிகாரி கெய்த் பிராட்ஷா நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியாவுடன் திட்டமிட்டபடி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற வேண்டும் என்று ஹியூக்ஸ் குடும்பத்தார் விரும்புகின்றனர். இதற்கு மேல் முடிவெடுக்க வேண்டியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்தான்" என்றார்.