பாதிக்கப்படும் டெஸ்ட் போட்டிகள்
மோசமான லைட்டிங் போன்ற இயற்கையான காரணங்களால் பல்வேறு சமயங்களில் டெஸ்ட் போட்டிகள் நிறுத்தப்படுகின்றன. இதுகுறித்து ஐசிசி வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அம்பயர்கள் எடுக்கும் இந்த முடிவுகளால், பல வெற்றி வாய்ப்புகளை பல அணிகள் இழக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன.
கைநழுவிய வெற்றி வாய்ப்பு
கடந்த 2013ல் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 227 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய நிலையில், மிச்சம் 24 பந்துகளில் 21 ரன்களே எடுக்க வேண்டிய நிலையில் அந்த ஆட்டம் மோசமான லைட்டிங் காரணமாக நிறுத்தப்பட்டது. இதற்கும் மேலாக ஆஸ்திரேலியா கைவசம் 5 விக்கெட்டுகளும் இருந்த நிலையில், அந்த ஆட்டம் கைவிடப்பட்டது.
4வது நாளில் கைவிடப்பட்ட போட்டி
இதேபோல கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இதேபோல மோசமான லைட்டிங் காரணமாக 4வது நாளில் ஆட்டம் கைவிடப்பட்டது. ஏற்கனவே ஐசிசியின் லைட்டிங் குறித்த விதிமுறை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிவரும் சூழலில், இந்த போட்டிகளும் அதன் விதிமுறைகளை கேள்விக்குறியாக்கி வருகின்றன.
17.4 ஓவர்களில் கைவிடப்பட்டது
இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சௌதாம்டனில் துவங்கிய இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டமும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக 17.4 ஓவர்களில் கைவிடப்பட்டது. இந்த விஷயத்தில் அம்பயர்களே முடிவெடுக்கும் படி ஐசிசி விட்டுள்ளது.
விதிமுறைகளில் மாற்றம் வேண்டும்
இந்நிலையில், ஐசிசி தன்னுடைய மோசமான லைட்டிங் குறித்த விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். மோசமான லைட்டிங் காரணமாக டெஸ்ட் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். லைட்டிங் மோசமாக இருந்தாலும் வீரர்களை மைதானத்திலேயே காத்திருக்க வைப்பதும், அதிகமான விளக்குகள் இருந்தாலும் மோசமான லைட்டிங் காரணமாக போட்டியை கைவிடுவதுமான விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.