சிறப்பான வீரர் ஷேன் வாட்சன்
ஐபிஎல்லில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவை ஒரு ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி வீரர் ஷேன் வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்களை அடித்தும் கோப்பையை அணி தவறவிட்டது. ஆனால் கடந்த 2018ல் அவர் அடித்த 57 பந்துகளில் 117 ரன்கள் அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது.
சிஎஸ்கேவிற்கு சாதகமாக இருக்கும்
அடுத்த மாதம் 19ம் தேதி ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் துவங்கவுள்ள நிலையில், அங்கு நிலவும் ஸ்லோ பிட்ச் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருக்கும் என்றும் வெற்றிக்கு காரணமாக அமையும் என்றும் அணியின் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியாவின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்த சமயத்தில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது சவாலானது என்று கூறியுள்ளார்.
ஷேன் வாட்சன் மகிழ்ச்சி
ஆனால் அதிர்ஷ்டவசமாக தங்களுக்கு துபாயில் பயிற்சி மேற்கொள்ள 3 வாரங்கள் கால அவகாசம் கிடைக்கும் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருடன் அதிக நேரங்களை செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் விவியன் ரிச்சர்ட்ஸ், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
திறமையான இளம் வீரர்கள்
மற்ற ஐபிஎல் அணிகளை ஒப்பிடும்போது சிஎஸ்கேவில் அனுபவம் மிக்க வீரர்கள் மற்றும் திறமைமிக்க இளம் வீரர்கள் உள்ளதாகவும் இது அணியின் மிகப்பெரிய பலம் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து தோனி குறித்து பேசுகையில், தான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்றும், ஐபிஎல்லாக இருந்தாலும் சர்வதேச போட்டிகளாக இருந்தாலும் அவர் தொடர்ந்து விளையாடவேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.