ஆர்சிபி வீரர் மாக்ஸ்வெல்
ஐபிஎல் 2021 தொடரில் ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் க்ளென் மாக்ஸ்வெல். கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் 13 போட்டிகளில் விளையாடி 108 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. இதையடுத்து அவரை பஞ்சாப் அணி ஏலத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்திருந்தது.
மாக்ஸ்வெல் மீது நம்பிக்கை
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த சீசனுக்கான ஏலத்தில் அவரை ஆர்சிபி அணி ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த சீசனில் அவர் சிறப்பாக விளையாடாத நிலையிலும் அவரது விளையாட்டின் மீது நம்பிக்கை வைத்து ஆர்சிபி அவரை அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
விராட், வில்லியர்சிடம் கற்க விருப்பம்
இந்நிலையில் இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக மிகவும் தீவிரமாக விளையாடவுள்ளதாக க்ளென் மாக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ஆர்சிபியில் இரண்டு உலக தரத்திலான வீரர்கள் விராட் கோலி மற்றும் டீ வில்லியர்ஸ் உள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவர்களிடம் இருந்து அதிகமாக கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
கோப்பைக்கான தீவிரம்
அவர்கள் இருவரின் ஆட்டத்தையும் தொடர்ந்து கவனித்து தன்னுடைய போட்டிகளை மேம்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சீசனில் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்து வெளியேறியது ஆர்சிபி. இந்த ஆண்டு கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றும் தீவிரம் அந்த அணியிடம் உள்ளது.
பூர்த்தி செய்வாரா மாக்ஸ்வெல்?
இந்நிலையில், ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மாக்ஸ்வெல் மீது மிகுந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அந்த அணி வைத்து ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த சீசனை போலல்லாமல் இந்த சீசனில் அவர் சிறப்பாக விளையாடி ஆர்சிபியின் நம்பிக்கையையை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.