மும்பை:கேதர் ஜாதவ் உலக கோப்பை அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்று இப்போது கூற முடியாது என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
இந்த நிமிடத்தில் இருந்து கணக்கு போட்டு பார்த்தால் இன்னும் 15 நாட்கள் தான் பாக்கி. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க. ஐபிஎல் தொடரில் ஓடியாடி, விளையாடிய இந்திய அணியினர் தற்போது ஓய்வில் இருக்கின்றனர். அவர்களின் அடுத்த இலக்கு வரவிருக்கும் உலக கோப்பை தொடர்.
குறுகிய நாட்களே உள்ள நிலையில் அணியில் அவர் விளையாடுவாரா... இவர் இருப்பாரா என்று பலர் ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். கொஞ்ச நாளாக அடங்கியிருந்த இந்த கருத்து கணிப்பு விளையாட்டுகளை தற்போது மீண்டும் ஆரம்பித்து வைத்திருக்கிறார் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் கேதர் ஜாதவ் விளையாடுவாரா, இல்லையா என்பதே தமக்கு தெரியாது என்று அவர் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:அணியில் 4வது வீரராக யாரை விளையாட வைக்கலாம் என்பதில் இன்னமும் முடிவு எடுக்கவில்லை.
அணியில் இருக்கும் அனைவருக்கும் 4ம் இடத்தில் விளையாடும் அளவுக்கு திறமை இருக்கிறது. அனைவருமே திறமையான வீரர்கள். 15 பேர் கொண்ட இந்திய அணி எப்போது இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் என்பதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம்.
கேதர் ஜாதவுக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. அதனால் அவர் உலக கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என்பதை இப்போது கூற முடியாது. அவருக்கு காலம் இருக்கிறது. எனவே ஓரிரு நாளில் தெரிந்து விடும். அப்படி இல்லை என்றால் அவருக்கு பதில் மாற்று வீரரை தேர்வு செய்வோம் என்று கூறினார்.