சிட்னி : ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் செயல்பட்ட அவர், அந்த அணியால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பந்த்துடன் இணைந்து விளையாடுவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் ஐபிஎல் 2021 ஏலத்தையொட்டி அந்த அணியால் விடுவிக்கப்பட்டார். ஏலத்தில் அவரை வாங்க ஆர்சிபியும் முயன்ற நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை 2.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
எப்போதுமே இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குறித்து பாராட்டுகளை தெரிவித்துவரும் ஸ்டீவ் ஸ்மித், தற்போது அவருடன் இணைந்து டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடுவது குறித்து உற்சாகம் தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த் மிகவும் திறமையான வீரர் என்றும் புகழ்ந்துள்ளார்.