டெல்லி: என்னை விலைக்கு வாங்க, யாராலும் முடியாது என்று, பிசிசிஐக்கு ஷேன் வார்னே பதில் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆள் தேர்வு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில், அனில் கும்ப்ளே, வீரேந்திர சேவாக், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர்.
அதேசமயம், இந்த பதவிக்கு, ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே விண்ணப்பிக்கலாம் என செய்திகள் வெளியாயின. எனினும், இதனை ஷேன் வார்னே உடனடியாக மறுத்துள்ளார்.
அவர் இதுகுறித்து விளக்கம் அளித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ' இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக, என்னைப் பலரும் கேட்கிறார்கள். அது மிகப்பெரிய ஜோக். நான் ஒரு போதும் அதுபற்றி சிந்திக்கவில்லை. விராட் கோஹ்லி எனது நல்ல நண்பர்.
அவருக்கும், எனக்கும் நல்ல புரிந்துணர்வு உள்ளது. இருந்தாலும், இந்திய அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட விரும்பவில்லை. நான் மிகவும் விலை உயர்ந்தவன். என்னை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது, ' என ஷேன் வார்னே குறிப்பிட்டுள்ளார்.