நடக்குமா நடக்காதா கங்குலி?
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லை என்று கூறியுள்ளார் கங்குலி. நடக்காது. நடத்த முடியாது என்று ஏன் அவர் கூறாமல் இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. எப்படியாவது நடத்திவிட மாட்டோமா என்ற நப்பாசையில் அவர் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை.
ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைப்பு
ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் தற்போது அது ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் நிலைமை சரியாகுமா என்று தெரியவில்லை. இந்த நிலையில்தான் 21 நாள் லாக்டவுனை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எனவே ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15ம் தேதி நடத்த வாய்ப்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கங்குலியிடம் பதில் இல்லை
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பிடிஐக்கு அளித்த பேட்டியில், என்னிடம் அதற்கு விடை இல்லை. இப்போதைக்கு அதுகுறித்து என்னால் கூற முடியாது. தள்ளிவைப்பு முடிவை அறிவித்தபோது என்ன சூழலில் இருந்தோமோ அதே சூழலில்தான் இப்போதும் இருக்கிறோம். எதுவும் கடந்த 10 நாட்களில் பெரிதாக மாறவில்லை. எனவே என்னிடம் விடை இல்லை. அதே நிலைதான் தொடர்கிறது என்றார் கங்குலி.
எதையும் திட்டமிட முடியாதுங்க
இப்போது எதையுமே உங்களால் திட்டமிட முடியாது. உலகம் முழுவதும் இப்போது கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய சூழலால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிக்கட்ட இன்சூரன்ஸ் கை கொடுக்குமா என்பது சந்தேகம்தான். இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். காரணம் இது அரசு ஏற்படுத்தியுள்ள லாக்டவுன். எனவே அரசு லாக்டவுன் இன்சூரன்சின் கீழ் வருமா என்பது சந்தேகமே என்றும் கங்குலி கூறியுள்ளார்.
எதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
பொறுத்திருந்து பார்க்க வேண்டும், இதையெல்லாம் நாம் மதிப்பிடவில்லை. இப்போதைய சூழலில் சரியான பதிலை என்னால் தரவும் இயலாது. சிறந்த திட்டம் எது என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுடன் நான் ஆலோசிக்க வேண்டும். ஆலோசித்த பிறகு நிலைமையை பரிசீலனை செய்வோம். அரசின் உத்தரவுகளை ஆலோசிப்போம். பிறகு பார்க்கலாம் என்றார் கங்குலி.
கார்டனைக் கேட்டா தருவீங்களா?
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தையும் வீரர்கள் தங்குமிடத்தையும் தற்காலிக மருத்துவ மையமாக மாற்றும் திட்டம் உள்ளதா, பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கம் இதுபோல செய்துள்ளதே என்ற கேள்விக்கு, அரசு கேட்டால் நிச்சயம் தருவோம். எல்லாம் தேவையைப் பொறுத்தே அமையும். நிச்சயம் கொடுப்போம். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் கங்குலி.
80 வயது தாத்தாவின் நிலை
இதற்கிடையே, லண்டனில் கங்குலியின் 80 வயது உறவினர் அனிமேஷ் முகர்ஜி தங்கியிருக்கிறாராம். தற்போது அங்குள்ள கொரோனாவைரஸ் சூழல் காரணமாக தனது உறவினர் குறித்து கவலை தெரிவித்துள்ளார் கங்குலி. அனிமேஷுடன் அவரது மனைவியும் இருக்கிறார். அவர்களது நலம் குறித்து தான் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார் கங்குலி. இருப்பினும் இங்கிலாந்தில் மருத்துவ முறைகள் சிறப்பாக உள்ளதால் தான் நிம்மதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.