ஆர்சிபி அபார வெற்றி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. இதில் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த தொடரில் ஆர்சிபி ஆடியுள்ள 3 போட்டிகளில் 3லும் வெற்றி பெற்று ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அதிக ரன்கள் கொடுத்து சொதப்பல்
ஆர்சிபியின் முதல் இரண்டு போட்டிகளிலும் அந்த அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் விக்கெட்டுகள் எதையும் எடுக்கவில்லை. மாறாக அதிகமான ரன்களையும் வள்ளல் போல வாரி வழங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன.
முதல் விக்கெட்
கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளிலும் இவர் அதிக ரன்களை கொடுத்தது அவருக்கு நெருக்கடிகளை கொடுத்தது. இந்நிலையில் நேற்றைய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் இந்த தொடரின் முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் யுஸ்வேந்திர சஹல். நேற்றைய போட்டியில் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 34 ரன்களை கொடுத்துள்ளார். இந்த தருணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்சிபி பதிவிட்டுள்ளது.
உணர்ச்சிவசப்பட்ட சஹல்
இதையடுத்து முதல் இரண்டு போட்டிகளில் சஹலுக்கு இருந்த நெருக்கடியிலிருந்து அவர் மீண்டுள்ளார். இதையடுத்து அவர் மைதானத்திலேயே உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வும் நடந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சஹல், சிறப்பாக பௌலிங் செய்தும் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றால் அது நம்மை காயப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
|
கண்கலங்கிய தனஸ்ரீ
தான் நேற்றைய போட்டியில் அதிக ரன்களை கொடுக்காமல் இருக்க திட்டமிட்டு பந்து வீசியதாகவும் சஹல் தெரிவித்துள்ளார். இதனிடையே, சஹல் முதல் விக்கெட்டை எடுத்ததும், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த அவரது மனைவி தனஸ்ரீயும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.