கேரள வீரர் சஞ்சு சாம்சன்
இந்திய அணியின் மிக சிறப்பான இளம் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் பார்க்கப்படுபவர் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 4 டி20 போட்டிகளில் மட்டுமே இவர் பங்கேற்றுள்ளார். ஆயினும் ராகுல் டிராவிட் மற்றம் கவுதம் கம்பீர் ஆகிய இருவரும் சாம்சன் குறித்தும், அவரது திறமைகள் குறித்தும் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
தோனி போல அமைதி
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணையதளத்தில் பேசியுள்ள சஞ்சு சாம்சன், கடந்த 2 வருடங்களில் தான் சந்தித்த தோல்விகளை ஏற்றுக் கொள்ள தான் பழகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தோல்விகளை தான் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி போல அமைதியாக எதிர்கொள்ள பழகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அணியின் முன்னேற்றத்தில் கவனம்
என்னுடைய வலிமைகள் மீது அதிக கவனத்தை செலுத்தவும் தோல்விகளை ஏற்கவும் பழகியுள்ளேன். அணியின் முன்னேற்றத்திற்காக தான் செயல்பட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். பேட்டிங் செய்யும் போது எம்எஸ் தோனி போல, தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தான் முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோலியுடன் விளையாடிய அனுபவம்
மீண்டும் இந்திய அணியின் இணைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சாம்சன், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறியுள்ளார். அது மிகச்சிறந்த அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார். நெருக்கடியான சூழலில் தன்மீது கோலி மற்றும் ரோகித் நம்பிக்கை வைத்து களமிறக்குவது மிகவும் சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.