சிறப்பான் ஷிகர் தவான்
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக சிறப்பான ஆட்டங்களை பதிவு செய்து வருகிறார் ஷிகர் தவான். குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் விளையாடிவரும் ஷிகர் தவான், கடந்த 2018 செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,315 ரள்களை அவர் குவித்துள்ளார்.
நம்பிக்கையை இழக்கவில்லை
தான் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் அதில் பங்கேற்று விளையாடுவேன் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை என்று ஷிகர் தவான் கூறியுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடவுள்ள ஷிகர் தவான் தற்போது யூஏஇயில் தனது குவாரன்டைனை முடித்துக் கொண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்வேன்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தவான், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை தான் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரஞ்சி, ஒருநாள் போட்டிகள் என எதில் வாய்ப்பு கிடைத்தாலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை தான் பதிவு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு கிடைத்தால் முழு எனர்ஜியை வெளிப்படுத்தி ஆடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்
கடந்த 2013ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் மிகவும் வேகமான சதத்தை பதிவு செய்தார் தவான். ஆயினும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ரோகித் சர்மா, கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா போன்றவர்கள் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரர்களாக உள்ளதால் தவானுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
முழுமையாக தயார்படுத்தி வருகிறேன்
இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்காக தன்னை முழு அளவில் தயார் படுத்தி வருவதாக தவான் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் சிறப்பான வீரர்கள் பலர் உள்ளநிலையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் கோப்பையை வெல்ல முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.