2ல் வெற்றி... 2ல் தோல்வி
ஐபிஎல் 2021 தொடரின் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த போட்டியை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நாளை சென்னையில் விளையாடவுள்ளது.
போல்ட் பாராட்டு
சென்னையில் மும்பை இந்தியேன்ஸ் அணி விளையாடக்கூடிய இறுதி போட்டி இது. இந்நிலையில் மும்பை அணியின் பௌலர் ட்ரெண்ட் போல்ட் அணி மற்றும் கேப்டனுக்காக அணியின் வலைதளத்தில் வீடியோ மூலம் பேசியுள்ளார். ஒவ்வொரு போட்டியின் கடைசி பந்துவரை போராடுவதை தனது பலமாக மும்பை இந்தியன்ஸ் அணி கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக ரன்களுக்கான தேவை
மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் அணி சொதப்பி வருகிறது. இந்நிலையில் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கான வேகத்துடன் இருப்பதாகவும் ஆனால் சிறப்பான துவக்கத்தை அளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்த ட்ரெண்ட் போல்ட், அதிகமான ரன்களை அடிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதிக திறமை தேவை
இந்நிலையில் அடுத்ததாக மோதவுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டி மிகவும் சிறப்பானதாக அமையும் என்றும் அதில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக ஸ்கோரை அடிக்கும் என்றும் ட்ரெண்ட் போல்ட் குறிப்பிட்டுள்ளார். பனிப்பொழிவுக்கிடையில் பந்தை கையாள்வதற்கு திறமை அதிகமாக தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரோகித் குறித்து பாராட்டு
இதனிடையே கேப்டன் ரோகித் சர்மாவின் கீழ் விளையாடுவது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் அவர் மிகவும் பாசிட்டிவானவர் என்றும் தெரிவித்த ட்ரெண்ட் போல்ட், அவரிடம் இருந்து அதிகமான அனுபவத்தை பெறுவதோடு அல்லாமல் எளிதாக பழக முடியும் என்றும் கூறியுள்ளார்.