3வது டெஸ்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
அஸ்வினின் 400 விக்கெட் சாதனை
இந்த போட்டியில் சாதனைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ரவி அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தனது 400 வது விக்கெட் சாதனையை மேற்கொண்டார். இதேபோல அக்சர் படேல் தனது ஹாட்ரிக் 5 விக்கெட்டுகள் சாதனையை மேற்கொண்டார். ரவி அஸ்வினும் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விராட் கோலி பாராட்டு
இந்நிலையில் ரவி அஸ்வின் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றும் அவர் தனது அணியில் விளையாடுவது குறித்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த சாதனையை பூர்த்தி செய்தவுடன் தான் அவரை லெஜண்ட் என்பதன் சுருக்கமாக லெஜ் என்று தான் அழைப்பேன் என்று முன்னதாக கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பான வெற்றி
இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்மூலம் 401 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார் ரவி அஸ்வின். அவர் இந்த போட்டியில் பெரும்பாலும் இடதுகை வீரர்கள்மீது தனது ஆதிக்கத்தை செலுத்தினார். அக்சர் படேலும் அஸ்வினும் இணைந்து இந்திய அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.